வேங்கடாசலபதி கோயில் தேரோட்டம்

கோயில் தேரோட்டம்  : 

கும்பகோணம் அருகேயுள்ள ஒப்பிலியப்பன்கோயிலில் அமைந்துள்ள ஸ்ரீ வேங்கடாசலபதிசுவாமி திருக்கோயில், 108 வைணவ தலங்களில் ஒன்றாகவும், தென்னக திருப்பதி, தமிழக திருப்பதி என்றும் போற்றப்படுகிறது.

இத்தகைய பெருமைக்குரிய தலத்தில் ஆண்டு தோறும் பங்குனி பிரமோற்சவம் 12 தினங்களுக்கு சிறப்பாக நடைபெறுவது வழக்கம். அதுபோல இவ்வாண்டும் இவ்விழா கடந்த 04ம் தேதி காலை கொடியேற்றத்துடன் தொடங்கி நாள் தோறும் பல்வேறு வாகனங்களில் சுவாமி திருவீதியுலா நடைபெற்று வருகிறது.

விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக 09ம் நாளான இன்று பங்குனி திருவோண நட்சத்திரத்தில் உற்சவர் பெருமாள் ஸ்ரீ பொன்னப்பர் பூமிதேவி தாயார்களுடன் சிறப்பு அலங்காரத்தில் திருத்தேருக்கு எழுந்தருள, கோயில் யானை பூமா முன்செல்ல, நாட்டிய குதிரைகள் நடனமாட, கேரள ஜெண்டை வாத்தியங்கள், நாதஸ்வர மேள தாள இசை முழங்க, ஒட்டகங்கள், மயிலாட்டம் ஆகிய கிராமிய கலை நிகழ்ச்சிகளுடன் தேரோட்டம் தற்போது சிறப்பாக நடைபெற்று வருகிறது.

இதில் ஏராளமான பெண்கள் உட்பட நூற்றுக்கணக்கானோர் திரண்டு வந்து கோவிந்தா, கோவிந்தா என விண்ணதிர முழக்கமிட்டு தேரினை வடம் பிடித்து இழுத்தும் தேரில் பவனி வரும் சுவாமிகளை தரிசனம் செய்தனர்.

Source link