ஈரான் நாட்டின் தலைவராக அரசாங்கத்தையும் ராணுவத்தையும் வழிநடத்தக் கூடிய ஒரு நபராக அயதுல்லா அலி கமேனி செயல்பட்டு வந்தார். அவர், படுகொலை செய்யப்பட்டது ஈரான் முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. மேலும், அதே தாக்குதலில் அலி கமேனியின் குடும்பத்தினர் அனைவரும் இறந்துவிட்டனர், மகன் மொஜ்தபா கமேனியும் மட்டும் படுகாயங்களுடன் உயிருடன் இருந்தார். இதை ஈரான் ஏற்கனவே உறுதிப்படுத்தி இருந்தது.
நாட்டின் தலைவர் இறந்த நிலையில், ஈரானின் புதிய தலைவராக யார் நியமிக்கப்படுவார் என்று கேள்விகள் எழுந்து நிலையில், மார்ச் 08ந் தேதி மொஜ்தபா கமேனியை(56) அந்நாட்டின் புதிய தலைவராக ஈரான் நியமித்தது. புதிய தலைவராக நியமிக்கப்பட்டதில் இருந்து மொஜ்தபா கமேனி ஒரு முறை கூட பொதுவெளியில் தென்படவே இல்லை. அவர் சார்ந்த வீடியோக்கள், புகைப்படங்கள், ஆடியோ பதிவுகள் கூட எதுவும் சோஷியல் மீடியாக்களில் வெளியாகவில்லை.
அதேபோல், அவரது உடல்நிலை அல்லது அவர் எங்கே இருக்கிறார் என்பது குறித்த ஐக்கிய நாடுகள் சபைக்கான கேள்விகளுக்கு ஈரான் இதுவரை பதிலளிக்கவில்லை. இதனால், அந்த தாக்குதலில் மொஜ்தபா கமேனி இறந்திருக்கலாம் என்று அமெரிக்காவும், இஸ்ரேலும் கூறி வந்தது. மேலும், ஈரான் மற்றும் அமெரிக்கா, இஸ்ரேல் நாடுகளுக்கு இடையேயான போரை முடிவுக்கு கொண்டுவர பாகிஸ்தான் முடிவு செய்தது.
இதற்காக ஈரான் மற்றும் அமெரிக்கா சார்பில் முக்கிய அதிகாரிகள் பாகிஸ்தானின் இஸ்லாமாபாத்தில் நேற்று கிட்டத்தட்ட 21 மணி நேரம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால், அது தோல்வியில் முடிந்த நிலையில் தான், தற்போது மொஜ்தபா கமேனி உயிரோட இருப்பதாகவும், அவரது உடல்நிலை குறித்தும் பரபரப்பான தகவல் வெளியாகி உள்ளது. ஈரானை சேர்ந்த தனியார் செய்தி நிறுவனம், வான்வழி தாக்குதலால் மொஜ்தபா கமேனி அடைந்த காயங்கள் குறித்த விபரங்களை வெளியிட்டு இருக்கிறது.
அந்த ஆதாரங்களின்படி, 56 வயதான மொஜ்தபா கமேனி டெஹ்ரானுகு தெற்கே உள்ள கோம் நகரில் ரகசியமாக சிகிச்சை பெற்று வருவதாகவும், அவருடைய முகத்தில் கடுமையான காயங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும், அவர் ஒரு காலை இழந்துவிட்டதாகவும், கல்லீரல் மற்றும் வயிற்றுப் பகுதிகளில் காயங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனால் தான் அவர் பொதுவெளியில் தோன்றவில்லை.
இருப்பினும், அவர் மனதளவில் தெளிவாகவே இருப்பதாகவும், தொலைபேசி வாயிலாக நாட்டின் முக்கிய நடவடிக்கைகளில் கலந்துக்கொண்டு வழிநடத்தி வருவதாகவும் செய்தி நிறுவனம் தெரிவித்து இருக்கிறது. அதேசமயம், ஈரான் தரப்பில் இருந்து இந்த செய்திகள் குறித்து இன்னும் அதிகாரப்பூர்வமாக எந்த தகவலும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
குஜராத் விமான விபத்தில் உயிர் தப்பியவர் சொன்ன அதிர்ச்சி தகவல்…
மேலும், ஈரான் தனது வரலாற்றில் மிகக் கடுமையான ஒரு காலகட்டத்தை எதிர்கொண்டுள்ள நிலையில், கமேனியின் உடல்நிலை ஒரு முக்கிய விவாதப் பொருளாக மாறி இருக்கிறது. அதேசமயம், தொடர்ந்து நடைபெற்று வரும் அமெரிக்க – இஸ்ரேல் தாக்குதல்கள் நடந்துவருவதால், பாதுகாப்பு காரணங்களுக்காக மொஜ்தபா கமேனி வெளியில் வராமல் இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.
