தமிழகத்தில் தவறான சிகிச்சை முறையால் பல உயிர்கள் பறிபோவது உடல் உறுப்புகளை இழப்பது வாடிக்கையாகி உள்ளது, அந்த வகையில் சென்னை சூளை பகுதியைச் சேர்ந்தவர் அருண்குமார். இவர், வேலப்பன்சாவடியில் உள்ள தனியார் பல் மருத்துவக் கல்லுாரி மற்றும் மருத்துவமனையில் (சவீதா), கடந்த ஆண்டு ‘பல் வேர்’ சிகிச்சைக்கு சென்றுள்ளார்.
சிகிச்சையின் போது, கூர்மையான கருவியை, மருத்துவர் தவறவிட்டுள்ளார். அந்த கருவி, அருண்குமாரின் வயிற்றுப்பகுதியில் உள்ளே சென்றதால் பாதிக்கப்பட்டுள்ளார். மூன்று நாட்களுக்கு பின், இயற்கை உபாதையை கழித்தபோது, அந்த கருவி வெளிவந்துள்ளது. இதையடுத்து, மருத்துவ அலட்சியம், சேவை குறைபாடால் இப்படி ஒரு சம்பவம் நடந்ததாகக் கூறி, தனியார் மருத்துவமனை நிர்வாகத்திடம் ரூ.33 லட்சம் இழப்பீடு கோரி, அருண்குமாரின் மனைவி சுகன்யா, சென்னை வடக்கு நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
வழக்கை விசாரித்த நுகர்வோர் நீதிமன்றம், மருத்துவமனை நிர்வாகம் மீதான குற்றச்சாட்டுக்கு, மனுதாரர் உரிய ஆதாரங்களை சமர்ப்பித்துள்ளதாகக் கூறி, மருத்துவ அலட்சியம், சேவை குறைபாடுக்கு 5 லட்சம் ரூபாயும், மேல் சிகிச்சைக்கு 2 லட்சம் ரூபாயும் இழப்பீடாக வழங்க வேண்டும் எனவும், வழக்கு செலவாக 10 ஆயிரம் வழங்க வேண்டும் எனவும் உத்தரவிட்டது.
