சாத்தூர்: பட்டாசு ஆலையில் பயங்கர வெடிவிபத்து.. பணியில் இருந்த 60க்கும் மேற்பட்டோரின் நிலை? – massive firefactory explosion near sattur

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே மடத்துப்பட்டியில் வெங்கடேசன் என்பவருக்கு சொந்தமான எக்ஸ்சல் என்ற பட்டாசு ஆலை செயல்பட்டு வருகிறது. இந்த பட்டாசு ஆலையில் சுமார் 100க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை செய்து வருவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் இன்று காலை பட்டாசு தொழிலாளர்கள் வழக்கம்போல் பணிக்கு வந்துள்ளனர்.

அப்போது, யாரும் எதிர்பாராதவிதமாக திடீரென பயங்கர வெடி சத்தத்துடன் பட்டாசுகள் வெடித்து சிதறியுள்ளன. இந்த வெடி விபத்தின் போது, ஆலையில், 60க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை செய்துக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. பட்டாசு ஆலையில் இருந்து 4 முறை பயங்கர சத்தத்துடன் வெடி சத்தம் கேட்டதாக அருகில் வசித்தும் வரும் பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.

உடனே, இந்த வெடி விபத்து குறித்து தகவலறிந்து மடத்துப்புரம் மற்றும் சிவகாசியிலிருந்து தீயணைப்பு வாகனங்கள் விரைந்து வந்துள்ளனர். இருப்பினும், ஆலையில் தொடர்ந்து பயங்கர சத்தத்துடன் பட்டாசுகள் வெடித்து சிதறி வருவதால் மீட்பு பணிகள் மேற்கொள்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. எனவே, தீ கட்டுக்குள் வந்ததும் தான் மீட்பு பணிகள் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், விபத்தில் காயமடைந்தவர்களை உடனே மருத்துவமனைக்கு அழைத்து செல்வதற்காக அரசு மற்றும் தனியார் ஆம்புலன்ஸ்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. மீட்பு பணி தொடங்கப்பட்ட பின்னரே விபத்தில் ஏற்பட்ட பாதிப்பு குறித்த தகவல்கள் தெரியவரும். 60க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டிருந்த வேளையில், ஆலையில் ஏற்பட்ட இந்த பயங்கர வெடி விபத்து சுற்றுவட்டார கிராம மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

Source link