சென்னை,
மீன்களின் இனப்பெருக்க காலத்தை கருத்தில் கொண்டு, தமிழகத்தில் பழவேற்காடு முதல் கன்னியாகுமரி வரை வங்கக்கடல் பகுதியில் 61 நாட்கள் மீன்பிடிக்க தடை விதிக்கப்படுகிறது.
அந்த வகையில், இந்த ஆண்டுக்கான மீன்பிடி தடைக்காலம் நாளை மறுநாள் தொடங்குகிறது.
இந்த தடைக் காலத்தில் ஆழ்கடலுக்கு மீன்பிடிக்க செல்லும் விசைப்படகுகளுக்கு அனுமதி கிடையாது. குறைந்த தூரமே சென்று மீன்பிடிக்கும் பைபர் படகு மற்றும் கட்டு மரங்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படும். இதனால், பெரிய மீன்கள் வரத்து குறைந்துபோகும். சிறிய வகை மீன்கள் மட்டுமே விற்பனைக்கு கிடைக்கும்.
ஆனால், மீன்பிடி தடைக்காலம் தொடங்க இன்னும் 2 நாட்கள் இருக்கும் நிலையில், சென்னையில் இப்போதே மீன்கள் விலை உயரத் தொடங்கியுள்ளது. நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாள் என்பதால், சென்னை காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் பொதுமக்கள் கூட்டம் அதிகமாக இருந்தது.
ஆனால், 40-க்கும் குறைவான விசைப்படகுகளே கரை திரும்பியதால், மீன்கள் வரத்தும் குறைவாகவே இருந்தது. இதனால், மீன்கள் விலை 3 மடங்கு உயர்ந்துவிட்டது. இதனால், அசைவப் பிரியர்கள் அதிர்ச்சி அடைந்தனர். வரும் நாட்களில், அரபிக் கடலில் பிடிக்கப்படும் மீன்களே பதப்படுத்தப்பட்டு, தமிழகத்திற்கு விற்பனைக்கு வரும் என்பதால், மீன்கள் விலை மேலும் உயரும் என்று தெரிகிறது.
மீன் விலை நிலவரம்:-
வஞ்சிரம் – ரூ.1,300 – ரூ.1,500
கறுப்பு வாவல் – ரூ.1,000 – ரூ.1,200
வெள்ளை வாவல் – ரூ.1,500 – ரூ.1,600
ஐ வாவல் – ரூ.1,700 – ரூ.1,800
பாறை – ரூ.600 – ரூ.700
சங்கரா – ரூ.500 – ரூ.600
கடல் விரால் – ரூ.700 – ரூ.800
முளியான் – ரூ.250 – ரூ.300
கவளை – ரூ.150 – ரூ.200
கானாங்கத்த – ரூ.250 – ரூ.300
தும்பிலி – ரூ.300 – ரூ.350
வாளை – ரூ.200 – ரூ.250
கடம்பா – ரூ.200 – ரூ.400
நண்டு – ரூ.400 – ரூ.500
வரி நண்டு – ரூ.600 – ரூ.700
இறால் – ரூ.400 – ரூ.500
டைகர் இறால் – ரூ.1,000 – ரூ.1,200
