கடந்த 2015-16-ம் நிதியாண்டிற்கான வருமான வரி கணக்கை நடிகர் விஜய் தாக்கல் செய்தார்.. அந்த ஆண்டிற்கான வருமானமாக ரூ.35 கோடியே 42 லட்சத்து 91 ஆயிரத்து 890 ரூபாய் பெற்றதாக குறிப்பிட்டிருந்தார்.. அந்த ஆண்டுக்கான மதிப்பீட்டு நடவடிக்கையை மேற்கொண்ட வருமான வரித்துறை, நடிகர் விஜய் வீட்டில் கடந்த 2015-ம் ஆண்டு நடத்திய சோதனையில் கைப்பற்றப்பட்ட ஆவணங்களுடன் ஒப்பிட்டு, புலி படத்திற்கு ரூ.15 கோடி வருமானத்தை கணக்கில் காட்டவில்லை என்பதை கண்டறிந்தது.
இதையடுத்து கடந்த 2022-ம் ஆண்டு, வருமானத்தை மறைத்ததற்கான ரூ.1 கோடியே 50 லட்சம் அபராதம் விதித்து வருமான வரித்துறை உத்தரவு பிறப்பித்தது.. தனக்கு அபராதம் விதித்து வருமான வரித்துறை பிறப்பித்த உத்தரவை எதிர்த்து நடிகர் விஜய் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.. இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் வருமான வரித்துறை உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்து ஏற்கனவே உத்தரவிட்டிருந்தது..
இதற்கிடையே விஜய் தாக்கல் வழக்கில் இறுதி விசாரணை நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி முன்பு விசாரணைக்கு வந்தது.. அப்போது விஜய் தரப்பில், சட்டப்படி அபராத உத்தரவை 2019-ம் ஆண்டு ஜூன் 30-ம் தேதிக்கு முன்பே உத்தரவு பிறப்பித்திருக்க வேண்டும்.. ஆனால் காலதாமதமாக 2022-ம் ஆண்டு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால், அதனை ரத்து செய்ய வேண்டும் என்று வாதிடப்பட்டது.
வருமான வரித்துறை தரப்பில், வருமான வரி மதிப்பீட்டை எதிர்த்த அப்பீல் முடிந்த பின், 6 மாத கால அவகாசத்திற்குள்ளேயே அபராத உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.. வருமான வரிச் சட்டப்படி நடிகர் விஜய்க்கு அபராதம் விதித்தது சரிதான்.. எனவே விஜய் தாக்கல் செய்த வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது.. இரு தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி வழக்கில் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தார்..
இந்த வழக்கின் தீர்ப்பு கடந்த பிப்ரவரி 6ஆம் தேதி வெளியானது. 1.50 கோடி அபராதம் விதித்ததை எதிர்த்து நடிகர் விஜய் தாக்கல் செய்த மனுவை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. இந்த நிலையில் தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் இரு நீதிபதிகள் கொண்ட அமர்வு முன்பு மேல்முறையீட்டு மனுவை விஜய் தாக்கல் செய்துள்ளார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என கூறப்படுகிறது.
