தாலியை கழற்றி எறிந்து விட்டு இளம் பெண் கதறல்

இளம் பெண் கதறல்  : 

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அடுத்த மத்தூர் அருகே உள்ள அத்திப்பள்ளம் கிராமத்தைச் சேர்ந்தவர் வீரமணி. இவரது மனைவி பழனியம்மாள். இவர்களது மூத்த மகள் சுவாதி (19), பெங்களூருவில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்.

இந்நிலையில், மத்தூரில் உள்ள சிவன் கோவிலில் குடும்பத்திற்காகச் சிறப்புப் பூஜை செய்ய வேண்டும் எனக் கூறி, பெங்களூருவில் இருந்த சுவாதியை அவரது தாய் பழனியம்மாள் சொந்த ஊருக்கு வரவழைத்துள்ளார். இன்று விடியற்காலை மகளை அழைத்துக்கொண்டு கோவிலுக்குச் சென்றுள்ளார்.

அப்போது, அங்கு ஏற்கனவே தயாராக இருந்த ராமகிருஷ்ணம்பதி கிராமத்தைச் சேர்ந்த உறவினர் ஜெயபால் என்பவருக்கு, சுவாதியைத் திருமணம் செய்து வைக்கத் தாய் தரப்பில் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த சுவாதி, தனக்கு இந்தத் திருமணத்தில் விருப்பமில்லை என்றும், திருமணம் செய்துகொள்ள முடியாது என்றும் கூறி கத்தி கூச்சலிட்டுள்ளார்.

இருப்பினும், அங்கிருந்தவர்கள் சுவாதியை வலுக்கட்டாயமாகப் பிடித்து அமர வைத்துள்ளனர். ஜெயபால் அந்தப் பெண்ணின் கழுத்தில் வலுக்கட்டாயமாகத் தாலியைக் கட்டியுள்ளார். இதனால் ஆத்திரமும் ஆவேசமும் அடைந்த சுவாதி, தனது கழுத்தில் கட்டப்பட்ட தாலியைப் பிடுங்கி வீசி எறிந்தார்.

“நான் ஏற்கனவே இரண்டு வருடமாக ஒருவரைக் காதலித்து வருகிறேன், என்னை விட்டுவிடுங்கள்” எனக் கூறி சுவாதி கதறி அழுத சம்பவம் அங்கிருந்தவர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. கோவிலுக்கு வந்திருந்த பொதுமக்களும் இச்சம்பவத்தைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மத்தூர் காவல்துறையினர்.

பாதிக்கப்பட்ட பெண்ணிடமும் அவரது குடும்பத்தாரிடமும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். கட்டாயத் திருமணம் தொடர்பாகப் புகார் அளிக்கப்பட்டால், சம்பந்தப்பட்டவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிகிறது.

காதலிப்பதாகக் கூறியும் கேட்காமல், பெண்ணின் சம்மதமின்றி நடந்த இந்தக் கட்டாயத் திருமண முயற்சி அப்பகுதியில் பெரும் பதற்றத்தை உருவாக்கியுள்ளது.

Source link