ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்ற தந்தை-மகன்… வேதாரண்யத்தில் ருசிகரம்

நாகை,

நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே உள்ள தேத்தாக்குடி வடக்கு கிராமத்தை சேர்ந்தவர் பூங்குன்றன் (வயது55). இவர் நாகை மாவட்டம் கீழ்வேளூர் ஒன்றியத்தில் உள்ள ஒரு பள்ளியில் இடைநிலை ஆசிரியராக கடந்த 13 ஆண்டுகளாக பணிபுரிந்து வருகிறார். இவர் தன்னுடைய 42-வது வயதில் தகுதித்தேர்வு தாள் 1-ல் தேர்ச்சி பெற்று பணிக்கு சேர்ந்தார். இவருடைய மகன் ராகுல் (27) பி.இ.பி.எட். முடித்தவர்.

இவர்கள் இருவரும் சமீபத்தில் நடந்த ஆசிரியர் தகுதித்தேர்வு தாள் 2-ஐ எழுதினர். இந்த நிலையில், நேற்று தேர்வு முடிவுகள் வெளியாகின. இதில் தந்தை, மகன் ஆகிய இருவரும் ஒரே நேரத்தில் தேர்ச்சி பெற்றுள்ளனர். தந்தை பூங்குன்றன் 85 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். மகன் ராகுல் அவரை கூட கூடுதலாக ஒரு மதிப்பெண் அதாவது 86 மதிப்பெண்கள் பெற்று, தந்தையை மிஞ்சி விட்டார்.

பூங்குன்றன் தன்னுடைய 55-வது வயதிலும் மனம் தளராமல் தேர்வில் பங்கேற்று தேர்ச்சி பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது. தந்தை, மகன் ஆகிய இருவரும் ஒரே நேரத்தில் ஆசிரியர் தகுதி தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றிருப்பதற்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டு தெரிவித்து வருகிறார்கள்.

Source link