ஆயுதங்களுடன் ரீல்ஸ் போடுபவர்களுக்கு தூத்துக்குடி எஸ்.பி. எச்சரிக்கை

தூத்துக்குடி மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

தூத்துக்குடி மாவட்டத்தில் வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம், எக்ஸ் மற்றும் முகநூல் போன்ற சமூக வலைதளங்களில் வாள், கத்தி, அரிவாள் போன்ற ஆயுதங்களை வைத்து கொண்டு புகைப்படம் மற்றும் ரீல்ஸ் வீடியோவை பதிவேற்றம் செய்து பொது அமைதிக்கு பங்கம் விளைவிப்பவர்கள் மற்றும் சமூக வலைதளங்களில் இருபிரிவினருக்கிடையே சாதி மத மோதல்களை தூண்டும் வகையில் புகைப்படம் அல்லது வீடியோ பதிவேற்றம் செய்தல் போன்றவர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

அதன்படி தூத்துக்குடி மாவட்டத்தில் 2026 ஜனவரி மாதத்தில் மட்டும் மேற்படி ஆயுதங்களை வைத்துக் கொண்டு புகைப்படம் மற்றும் வீடியோ பதிவு செய்து பொதுஅமைதிக்கு பங்கம் விளைவித்தல் மற்றும் பொதுமக்களை அச்சுறுத்துதல் போன்ற செயல்களில் ஈடுபட்ட குற்றத்திற்காக 15 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, எதிரிகள் கைது செய்யப்பட்டு துரிதமாக விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும் இதுபோன்ற சம்பவங்களில் ஈடுபட்டு வருபவர்களின் நடவடிக்கைகளை காவல்துறையினரால் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.

இதுபோன்று ஆயுதங்களை காட்சிபடுத்தி வீடியோ, ரீல்ஸ் அல்லது புகைப்படம் வைத்து சமூக வலைதளங்களில் பதிவிடுவது சட்டப்படி குற்றமாகும். எனவே தூத்துக்குடி மாவட்டத்தில் மேற்படி குற்ற செயல்களில் யாரும் ஈடுபட வேண்டாம் என தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி. சிலம்பரசன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Source link