கோவில்பட்டியில் 1.5 கிலோ கஞ்சா, பைக் பறிமுதல்: 2 வாலிபர்கள் கைது

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி மதுவிலக்கு காவல் நிலைய போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில் மதுவிலக்கு காவல் நிலைய இன்ஸ்பெக்டர் மீஹா தலைமையில் போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

அப்போது கோவில்பட்டி பாரதிநகர் பகுதியில் சந்தேகப்படும்படி இருசக்கர வாகனத்தில் நின்று கொண்டிருந்தவர்களை பிடித்து போலீசார் விசாரணை செய்தனர். அதில் அவர்கள் கோவில்பட்டியைச் சேர்ந்தவர்களான பாலா (வயது 26) மற்றும் காளீஸ்வரன்(28) ஆகியோர் என்பதும், அவர்கள் விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்ததும் தெரியவந்தது.

இதுகுறித்து கோவில்பட்டி மதுவிலக்கு காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து மேற்சொன்ன 2 வாலிபர்களையும் கைது செய்து, அவர்களிடமிருந்து 1.5 கிலோ கஞ்சா மற்றும் ஒரு இருசக்கர வாகனம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

தூத்துக்குடி மாவட்டத்தில் இதுபோன்று கஞ்சா, புகையிலை போன்ற போதை பொருட்களை விற்பனை செய்பவர்கள் மற்றும் வாங்குபவர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி. சிலம்பரசன் தெரிவித்துள்ளார்.

Source link