மாநில வளர்ச்சிக்கடன் நிலுவைத் தொகை: அரசு நிதித்துறை வெளியிட்ட முக்கிய தகவல்

சென்னை,

அரசு நிதித் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தமிழ்நாடு அரசு நிதித்துறையின் 03.03.2016 ஆம் நாளிட்ட 306(L)/W&M-II/2016 அறிவிக்கையின் வரையறைகளின் படி வழங்கப்பட்ட 8.53 சதவீதம் தமிழ்நாடு மாநில வளர்ச்சிக்கடன், 2026 நிலுவைத் தொகையானது 09.03.2016 அன்று 08.03.2026-ம் நாள் உட்பட்ட உரிய நாளது வரையிலான வட்டித் தொகையுடன் திருப்பிச் செலுத்தப்படும் என்று பொதுத் தகவலுக்காக அறிவிக்கப்படுகிறது.

யாதொரு மாநில அரசால், 1881 ஆம் ஆண்டு செலாவணி முறிச்சட்டத்தின் கீழ், மேற்சொன்ன நாளினை விடுமுறை நாளாக அறிவிக்கப்பட்டிருப்பின், அந்த மாநிலத்தின் தொகை செலுத்தும் அலுவலகங்களால், முந்தைய அலுவலகப் பணிநாளில் திருப்பிச்செலுத்தப்படும். 09.03.2026 ஆம் நாளிலிருந்தும் அதற்கு பின்னரும் இக்கடனுக்கு வட்டித் தொகை சேராது.

2. 2007ஆம் ஆண்டு அரசு கடன் பத்திரங்களின் ஒழுங்குமுறை விதிகளிலுள்ள 24(2) மற்றும் 24(3)ஆம் துணை ஒழுங்குமுறை விதிகளின்படி, பொதுதுணை பேரேட்டு படிவத்தில் அல்லது மூலப் பொது துணைப் பேரேட்டு கணக்கில் அல்லது பங்கு முதல் சான்றிதழில், அரசு கடன் பத்திரங்களை வைத்திருக்கும் பதிவு பெற்ற நபர் ஒருவருக்கு, அவருடைய வங்கி கணக்கில் அல்லது மின்னணு பதிவு மூலம் நிதிகளை வரவு வைக்கும் வசதியுள்ள யாதொரு வங்கியில் கணக்கு வைத்திருக்கும் அவருடைய வரவுக் கணக்கில் உரிய விவரங்களை சேர்த்து, தொகை செலுத்துவதற்கான ஆணை வழங்குவதன் மூலம் முதிர்வுத் தொகை வழங்கப்படும்.

கடன் பத்திரங்களை பொறுத்தமட்டில், தொகை செலுத்தும் நோக்கத்திற்காக, நேர்விற்கேற்ப அசல் சந்தாதாரர் அல்லது இத்தகைய அரசு கடன் பத்திரங்களை வைத்திருப்பவர் வட்டித்தொகை செலுத்துவதற்காக முகப்பிடப்பட்டுள்ள/பதிவு செய்யப்பட்டுள்ள வங்கிக்கு அல்லது கருவூலத்திற்கு மற்றும் சார் கருவூலத்திற்கு அல்லது பாரத ஸ்டேட் வங்கியின் கிளைக்கு நேர்விற்கேற்ப அவர்களுடைய வங்கிக் கணக்கின் உரிய விவரங்களை அளிக்க வேண்டும்.

3. இருப்பினும், வங்கிக் கணக்கில் உரிய விவரங்கள் இல்லாத/மின்னணு மூலம் நிதிகளை வரவு வைப்பதற்கு ஆணை பிறப்பிக்கப்படாத நேர்வில், உரிய நாளில் தொகையை திருப்பிச் செலுத்துவதற்கு ஏதுவாக 8.53% தமிழ்நாடு மாநில வளர்ச்சிக்கடன், 2026 தொடர்பான கடன் பத்திரங்களை வைத்திருப்பவர்கள், அவர்களுடைய கடன் பத்திரங்களை, 20 நாட்களுக்கு முன்னதாகவே, பொதுக் கடன் அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும். கடன் தொகையை திருப்பிச் செலுத்துவதற்காக கொடுக்கப்படும் கடன் பத்திரங்களின் பின் பக்கத்தில், கீழேகுறிப்பிடப்பட்டுள்ளவாறு உரியமுறையில் எழுதி கையொப்பமிட வேண்டும்.

“சான்றிதழுக்குரிய அசல் தொகை பெறப்பட்டது”

4. பாரத ஸ்டேட் வங்கியின் கிளை ஒன்றில் கருவூலப் பணிகள் மேற்கொள்ளப்படும் இடங்களில், இக்கடன் பத்திரங்கள், பங்கு முதல் சான்றிதழ்கள் வடிவில் இருக்குமாயின், சம்பந்தப்பட்ட வங்கியின் கிளையில்தான் ஒப்படைக்க வேண்டுமே தவிர கருவூலத்திலோ அல்லது சார் கருவூலத்திலோ ஒப்படைக்கக்கூடாது என்பதை குறிப்பாக கருத்தில் கொள்ள வேண்டும்.

5. கடன் தொகை திருப்பிச் செலுத்தக் கோரி, கடன் பத்திரங்கள் முகப்பிடப்பட்டுள்ள இடங்கள் நீங்கலாக பிற இடங்களில் தொகையைப் பெற விரும்புவோர், கடன் பொறுப்பைத் தீர்க்கும் வாசகத்தை அப்பத்திரங்களின் பின்புறம் உரியவாறு எழுதி கையொப்பமிட்டு, சம்மந்தப்பட்ட பொதுக்கடன் அலுவலகத்திற்கு பதிவு அஞ்சல் மற்றும் காப்புறுதி அஞ்சல் மூலம் அனுப்பவேண்டும். தமிழ்நாடு மாநிலத்தில், அரசு கருவூலகப் பணிகளை மேற்கொள்கின்ற யாதொரு கருவூலம் / சார் கருவூலம் அல்லது பாரத ஸ்டேட் வங்கியின் கிளைகளில் செலுத்தத் தக்க கேட்புக் காசோலை ஒன்றை வழங்குவதன் மூலம், பொதுக் கடன் அலுவலகம், தொகை வழங்கும்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Source link