பாஜக தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசனின் உடல்நிலை குறித்து மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
சட்டமன்ற தேர்தல் 2026
தமிழ்நாட்டில் ஒரே கட்டமாக சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, ஏப்ரல் 23ஆம் தேதி மாநிலம் முழுவதும் உள்ள 234 சட்டமன்ற தொகுதிகளுக்கும் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. பின்னர் மே 4ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. இந்த தேர்தலில் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் அரசியலுக்கு வருகை தந்துள்ளதால், திமுக, அதிமுக, நாதக உள்ளிட்ட கட்சிகளிடையே மாநில அரசியல் களம் நான்கு முனை போட்டியாக மாறியுள்ளது.
கோவை வடக்கு தொகுதியில் வானதி சீனிவாசன் போட்டி
அதன்படி, அடிமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் பாஜக சார்பில், கோவை வடக்கு தொகுதியில் வானதி சீனிவாசன் வேட்பாளராக களமிறங்கியுள்ளார். கடந்த 2021 சட்டமன்ற தேர்தலில், கோவை தெற்கு தொகுதியில் போட்டியிட்டார்.மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசனை விட 1,728 வாக்குகள் அதிகமாகப் பெற்று வெற்றி பெற்றார்.இந்த முறை கோவை வடக்கு தொகுதியை அண்ணாமலை போட்டியிருந்த நிலையில், வானதி சீனிவாசன் வசம் சென்றது.
வானதி வேட்புமனுத் தாக்கல்
தேர்தலுக்கு இன்னும் 11 நாட்களே எஞ்சியுள்ள நிலையில் அரசியல் கட்சிகள் தீவிர சுறாவளி பிரச்சாரத்தில் ஈடுப்பட்டு வருகிறது. அந்த வகையில்,கடந்த ஏப்ரல் 6 ஆம் தேதி வேட்புமனுத்தாக்கல் செய்த வானதி சீனிவாசன் தன்னுடைய பிரச்சாரத்தை தொடங்கினார்.இந்த நிலையில், மூன்றாவது நாளான நேற்று கோவை வடக்கு தொகுதியில் வாக்கு சேகரிப்பில் ஈடுப்பட்டுக் கொண்டிருந்த போது திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. உனடியாக பாஜக நிர்வாகிகள் கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைகாக அனுமதித்தனர்.
வானதி சீனிவாசனுக்கு திடீர் உடல்நலக்குறைவு
மருத்துவர்கள் அவரை பரிசோதித்தபோது, 48 மணி நேரம் முழுமையான ஓய்வு எடுக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளனர். இதையடுத்து அவரது தேர்தல் பிரச்சார நிகழ்ச்சிகள் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டன. இதற்கிடையில் அவரது உடல்நிலை குறித்து மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், வானதி சீனிவாசன் நேற்று மதியம் 2:50 மணியளவில் வலது காலில் ஏற்பட்ட லேசான தொற்று காரணமாக கோவை மெடிக்கல் சென்டர் மற்றும் ஹாஸ்பிட்டலில் அனுமதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மருத்துவமனை அறிக்கை
அவருக்கு ஆன்டிபயாட்டிக் மருந்துகள் மற்றும் தேவையான ஆதரவு சிகிச்சைகள் வழங்கப்பட்டு வருவதாகவும், இரண்டு நாட்கள் படுக்கை ஓய்வு அவசியம் என மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுக் கொண்டிருந்தபோது, அவர் எடுத்த ஒரு மருந்துக்கு லேசான அலர்ஜி ஏற்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது. இதையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நேற்று இரவு 8 மணியளவில் அவர் கண்காணிப்புக்காக ஐசியு பிரிவிற்கு மாற்றப்பட்டார். தற்போது அவர் பேசக்கூடிய நிலையில் நலமாக உள்ளார்.முழுமையாக குணமடைய மேலும் 3 முதல் 4 நாட்கள் சிகிச்சை தேவைப்படும் என்றும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது
