யோகா குரு என அறியப்படும் பாபா ராம்தேவின் பதஞ்சலி நிறுவன பொருட்கள், தீராத நோய்களை குணப்படுவத்துவதாகவும், அலோபதி மருத்துவ முறைக்கு எதிராகவும் விதிகளை மீறி விளம்பரப்படுத்துவதாகக் கூறி, உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதையடுத்து, தவறான விளம்பரங்களை வெளியிட தடைவிதித்த உச்சநீதிமன்றம், மீறினால் ரூ.1 கோடி அபராதம் விதிக்கப்படும் எனவும் எச்சரித்தது. இதுபோன்ற விளம்பரங்களை ஒளிபரப்ப மாட்டோம் என பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ததையும் மீறி, பதஞ்சலி மீண்டும் விளம்பரம் செய்தது. இதுதொடர்பாக பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டும், நிறுவனம் பதிலளிக்காத நிலையில், வழக்கு நீதிபதிகள் ஹீமாகோலி, அசானுதீன் அமனுல்லா அமர்வுமுன் உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.
அப்போது, நீதிமன்ற அவமதிப்பு வழக்கு ஏன் தொடரக்கூடாது எனக்கேட்டு, 2 வாரங்கள் அவகாசம் அளிக்கப்பட்டும், ஏன் பதஞ்சலி பதிலளிக்கவில்லை என நீதிபதிகள் கடுமையாக கேள்வியெழுப்பினர். நீதிமன்றத்துக்கு அளித்த உறுதிமொழியினை மீறி விளம்பரத்தை வெளியிட்டது தொடர்பாக பதிலளிக்க வேண்டுமெனவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர். தொடர்ந்து போதைப்பொருள் மற்றும் மருந்து சட்டத்தின் விதிகளை மீறி, தவறான விளம்பரங்களை பதஞ்சலி ஒளிபரப்புவதாகவும் நீதிபதிகள் குறிப்பிட்டனர். தொடர்ந்து, அடுத்த விசாரணையின்போது பதஞ்சலி நிர்வாக இயக்குநர் ஆச்சார்யா பாலகிருஷ்ணா மற்றும் இணை நிறுவனர் பாபா ராம்தேவும் நேரில் ஆஜராக நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

