சென்னை: முருகபெருமானின் வழிபாட்டை தடுத்து நிறுத்தும் வகையில், பாரதி சேவா மையம் சார்பில் நடக்க இருந்த, ‘அடியார்களுடன் ஆறுமுகன்’ என்ற ஊர்வலம், அன்னதானம் மற்றும் குடும்பம் சங்கமம் நிகழ்ச்சிக்கு, போலீசார் திடீரென தடை விதித்திருப்பது, பக்தர்களிடம் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை, திருவான்மியூர், லட்சுமிபுரம் காமராஜர் சாலையில், பாரதி சேவா மையம் செயல்படுகிறது. இதன் சார்பில், 23 ஆண்டுகளாக, குடும்பம் சங்கமம், ஆண்டு விழா மற்றும் முருகபெருமான் வழிபாடு ஊர்வலம் என, பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு உள்ளன.
அந்தவகையில், விழா குழுவினர், இந்த ஆண்டும், அதாவது, 24வது ஆண்டு விழா, குடும்பம் சங்கமம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளை வெகு விமரிசையாக நடத்த, திருவான்மியூர் காமராஜர் சாலை, லட்சுமிபுரம் பகுதியில் ஏற்பாடு செய்திருந்தனர். முருகபெருமான், வள்ளி, தெய்வானை வேடமணிந்த மாணவ – மாணவியர், ‘அடியார்களுடன் ஆறுமுகன்’ என்ற ஊர்வலத்தில் பங்கேற்கவும் தயாராக இருந்தனர்.
இந்த ஊர்வலம், திருவான்மியூர் லட்சுமிபுரம் காந்தி சிலை அருகே புறப்பட்டு, பரிவேட்டைச் சாவடி, கங்கையம்மன் கோவில் தெரு, கடற்கரை சாலை, முத்துலட்சுமி சாலை வழியாக சென்று, விழா மேடையை வந்தடைய இருந்தது.
விழா கோலம்
ஊர்வலம் செல்ல இருந்த சாலைகள் மற்றும் தெருக்களில் கோலமிட்டும், தீபம் ஏற்றியும் பக்தர்கள், முருகபெருமானை வழிபட தயாராக இருந்தனர். இதனால், அப்பகுதி முழுதும் விழா கோலம் பூண்டிருந்தது. ஊர்வலத்தை தொழில் வர்த்தர்கள் ரவீந்திரன், வேணுகோபால், சுந்தர் ஆகியோர் துவக்கி வைக்க இருந்தனர்.
ஒட்டு மொத்த நிகழ்ச்சிக்கும், சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞரும், சட்ட ஆலோசகருமான ஆறுமுக நயினார் தலைமை தாங்க இருந்தார். சிறப்பு விருந்தினராக, ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி லெப்டினன்ட் கர்னல் தியாகராஜன் பங்கேற்க இருந்தார். நடனம், நாடகம், பேச்சு, விளையாட்டு, கோலப்போட்டிகள் என, பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ – மாணவியருக்கு பரிசளிப்பு நிகழ்ச்சியும் நடைபெற இருந்தது.
கலை நிகழ்ச்சிகளும் நடக்க இருந்தன. நேற்று மாலை, 3:00 மணியளவில் ஊர்வலம் துவங்க இருந்தது. குடும்பம் சங்கமம் நிகழ்ச்சியில் பங்கேற்க, பெண்கள் மற்றும் ஆண்கள் என, ஏராளமானோர் அங்கு வந்திருந்தனர். இந்நிலையில், ஊர்வலம், கலை நிகழ்ச்சிகள், முருகப்பெருமான் வழிபாடு என, ஒட்டு மொத்த நிகழ்ச்சிக்கும், திருவான்மியூர் காவல் நிலைய போலீசார், திடீரென தடை விதித்தனர். 50க்கும் மேற்பட்ட போலீசாரும் குவிக்கப்பட்டனர்.
அவர்கள் விழா குழுவினரிடம், ‘இந்த இடத்தில் கூடியுள்ள அனைவரையும் கலைந்து செல்லமாறு வலியுறுத்த வேண்டும்’ என, கட்டாயப்படுத்தினர். விழா குழுவினர், போலீசாரிடம் வேண்டுகோள் விடுத்தும் அவர்கள் அதை கண்டுகொள்ளவே இல்லை. கூட்டத்தை கலைப்பதிலேயே குறியாக செயல்பட்டனர். வேறு வழியின்றி, விழா குழுவினரும், நிகழ்ச்சிக்கு போலீசார் தடை விதித்து இருப்பதால் கலைந்து செல்லுமாறு ஒலிபெருக்கி வாயிலாக வேண்டுகோள் விடுத்தனர்.
இதனால், மாணவ – மாணவியர் சோர்வடைந்தனர். அங்கு கூடியிருந்த முருகபெருமானின் பக்தர்கள் பெரும் கொந்தளிப்புடன் காணப்பட்டனர்.
இடையூறு
பாரதி சேவா மைய நிர்வாகிகள் கூறியதாவது: கடந்த ஆண்டும், இதே நிகழ்ச்சிக்கு போலீசார் திடீரென தடை விதித்தனர். நீதிமன்றத்தில் அனுமதி பெற்று விழாவை நடத்தினோம். இந்த ஆண்டும், நாங்கள் முறைப்படி அனுமதி கேட்டு விண்ணப்பித்து இருந்தோம்.
ஆனாலும், 22ம் தேதியான நேற்று நடைபெற இருந்த நிகழ்ச்சிக்கு, நேற்று முன்தினமான, 21ம் தேதி இரவு, 10:00 மணிக்கு, பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறு ஏற்படும், சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்பட வாய்ப்பு இருப்பதாக கூறி, ஊர்வலத்திற்கு அனுமதி தர மறுத்து, தடை விதித்துள்ளனர். இதன் பின்னணியில், சதியும், முருகபெருமான் வழிபாட்டை தடுப்பதில் உள்நோக்கம் இருப்பதாகவும் கருத வேண்டி உள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.
