ஒடிசா மாநிலம் கட்டாக் என்ற இடத்தில் செயல்பட்டு வரும் எஸ்.சி.பி மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் இன்று அதிகாலை மூன்று மணிக்கு அவசர சிகிச்சை பிரிவில் தீப்பிடித்துக்கொண்டது. அதிகாலை நேரம் என்பதால் அனைத்து நோயாளிகளும் உறக்கத்தில் இருந்தனர். இதனால் தீ மளமளவென பரவியது. இதில் நோயாளிகளால் தப்பித்து செல்ல முடியவில்லை. தீவிபத்து குறித்து கேள்விப்பட்டதும் தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து நோயாளிகளை மீட்டனர். ஆனாலும் 10 நோயாளிகள் தீவிபத்தில் சிக்கி உயிரிழந்தனர்.
இது தவிர மருத்துவமனை ஊழியர்கள் 11 பேரும், 7 நோயாளிகளும் காயம் அடைந்தனர்.
தீவிபத்தின் போது நோயாளிகளை காப்பாற்ற முயன்றதால் மருத்துவமனை ஊழியர்கள் காயம் அடைந்ததாக மாநில முதல்வர் மோகன் தெரிவித்தார். முதல்வர் மோகன் அமைச்சர்களுடன் சென்று தீவிபத்து நடந்த மருத்துவனையை பார்வையிட்டார். அதோடு காயம் அடைந்தவர்களை சந்தித்து ஆறுதல் கூறினார்.
அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த 23 நோயாளிகள் மற்ற பிரிவுக்கு மாற்றப்பட்டனர். அவர்களை மாற்றும் போது 7 பேர் உயிரிழந்ததாகவும், 3 பேர் மாற்றிய பிறகு இறந்ததாகவும் போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. மாநில அரசால் இந்த மருத்துவ கல்லூரி மருத்துவமனை நடத்தப்பட்டு வருகிறது. இந்த விபத்தில் இறந்தவர்கள் குடும்பத்திற்கு ரூ.25 லட்சம் வழங்கப்படும் என்று முதல்வர் மோகன் தெரிவித்துள்ளார். ஆரம்பக்கட்ட விசாரணையில் ஏ.சி.யில் மின்கசிவு ஏற்பட்டு இத்தீவிபத்து நடந்ததாக தீயணைப்பு துறை அதிகாரிகள் தெரிவித்தனர். தீவிபத்து குறித்து உயர்மட்ட விசாரணைக்கு முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
