அதிக கட்சிகளை கூட்டணியில் சேர்ப்பது பலமா?

‛தோல்வி பயத்தில் மிக மிக மோசமான முடிவுகளை எடுக்கிறது தி.மு.க.,’

– பாலு, பா.ம.க., செய்தித் தொடர்பாளர்

மீண்டும் ஆட்சிக்கு வர முடியாது என்ற தோல்வி பயத்தில்தான், மிக மிக மோசமான, தடுமாற்றமான முடிவுகளை தி.மு.க., எடுத்துள்ளது. மூன்று முறை முதல்வராக இருந்த பன்னீர்செல்வத்தை கட்சியில் சேர்த்தது, தோல்வி பயத்தின் உச்சம்.

அசுர பலத்தில் உள்ள அசைக்க முடியாத கூட்டணி என, தி.மு.க., பெருமை பேசி வந்தது. கடந்த லோக்சபா தேர்தலில், வேண்டாம் என ஒதுக்கிய தே.மு.தி.க., போன்ற கட்சிகளை சேர்த்ததன் வாயிலாக, இது தகர்க்கப்பட்டுள்ளது; கூட்டணியே கலகலத்துள்ளது.

தி.மு.க., எது செய்தாலும் ஏற்கும் ம.தி.மு.க.,வுக்கு ஒதுக்கிய நான்கு தொகுதிகளில், மூன்றில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட கட்டாயப்படுத்தி சம்மதிக்க வைத்துள்ளனர். தனிப்பெரும்பான்மை கிடைக்கும் என்ற நம்பிக்கை, ஸ்டாலினுக்கு இல்லை. அதனால் இப்படியெல்லாம் நிர் ப் பந்திக்கின்றனர்.

தோல்வி பயத்தால் ஏற்பட்ட தடுமாற்றத்தில், தி.மு.க., வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு, 22 கட்சிகளை கூட்டணியில் சேர்த்துள்ளனர். வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை இருந்தால், கூட்டணியிலிருந்து யாரும் வெளியே வர மாட்டார்கள். தி.மு.க., கூட்டணியில் இருந்தால், எம்.எல்.ஏ., ஆக முடியாது என்பதால் தான் வேல்முருகன் வெளியேறி விட்டார்.

‛சாத்தியப்படும் அனைவரையும் உள்ளடக்கிய கூட்டணியே வெற்றி பெறும்’

– கோபண்ணா, தமிழக காங்கிரஸ் துணைத் தலைவர்

கடந்த 2021 சட்டசபை தேர்தலை விட, அ.தி.மு.க., கூட்டணி பலவீனமாக உள்ளது. எனவே, தி.மு.க.,வுக்கு தோல்வி பயம் இருக்க முடியாது.

பீஹாரில் பெரிய, சிறிய கட்சிகளை ஒருங்கிணைத்து தான், பா.ஜ., கூட்டணி வென்றது. தமிழகத்தில் இப்போது நான்கு முனை போட்டி இருப்பதால், எந்த தொகுதியிலும் வெற்றியை நழுவ விட்டுவிடக் கூடாது என்பதில், தி.மு.க., கவனமாக உள்ளது.

அதற்காகவே, ஒரு மாவட்டம், ஒரு தொகுதியில் செல்வாக்குள்ள கட்சியை கூட விடாமல், கூட்டணியில் முதல்வர் ஸ்டாலின் சேர்த்துள்ளார். ஸ்டாலினை பொறுத்தவரை தேர்தல் வெற்றியைத் தாண்டி, தமிழக அரசியல் களத்தில் பா.ஜ.,வை தனிமைப்படுத்த விரும்புகிறார். அதற்கு அனைவரையும் அரவணைத்துச் செல்ல வேண்டியது மிக மிக அவசியம்.

முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வத்தை தி.மு.க.,வில் சேர்த்ததும், தே.மு.தி.க.,வை கூட்டணியில் சேர்த்ததும், இந்த அடிப்படையில்தான். எனவே, அதிக கட்சிகளை கூட்டணியில் சேர்த்தது தோல்வி பயம் அல்ல; வெற்றிக்கான வியூகம். ஸ்டாலினின் பரந்த மனப்பான்மை, பெருந்தன்மையை காட்டுகிறது.

Source link