அதிமுகவுடன் கூட்டணி வைத்திருந்தால் அரசியலில் தேர்தல் களமே மாறி இருக்கும் – திருமாவளவன்

செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கம் அடுத்த புதுப்பட்டினத்தில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் அங்கம் வகிக்கும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் செய்யூர் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் சிந்தனை செல்வனை ஆதரித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு பானை சின்னத்திற்கு வாக்குகளை சேகரித்தார்.

பிரசாரத்தில் திருமாவளவன் பேசுகையில், இந்த தொகுதியில் நமக்கு எதிராக போட்டியிடும் அதிமுக வேட்பாளர் என்ன செய்யப் போகிறோம் என்ற திட்டங்களை கூறி ஓட்டு கேட்காமல் நான் வெற்றி பெற்றால் பத்தாயிரம் ரூபாய் ஒவ்வொரு குடும்பத்துக்கும் கொடுப்பேன் என கூப்பன் கொடுத்து ஓட்டு கேட்கிறார்.

இங்கே ஒரு நடிகர் இருக்கிறார் கட்சி தொடங்கிய சந்திக்கின்ற முதல் தேர்தலிலே முதலமைச்சர் ஆக வேண்டும் என ஆசைப்படுகிறார். பதவிக்காக மட்டுமே வருகிறார் பல ஆயிரம் கோடிகளை விட்டுவிட்டு மக்கள் பணி செய்ய வந்துள்ளதாக கூறுகிறார்கள். ஆனால் பதவிக்காக மட்டுமே வந்திருக்கிறார்கள்.

விடுதலை சிறுத்தைகள் நினைத்து இருந்தால் எத்தனையோ கட்சிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி கூட்டணி அமைத்திருக்க முடியும். ஆனால் நாங்கள் ஏன் திமுகவுடன் கூட்டணி வைத்து இருக்கிறோம். அதுதான் கொள்கை பிடிப்பு. அதிமுக உடன் பேச்சுவார்த்தை நடத்திக்கொண்டு திமுகவுடன் பேச்சுவார்த்தை நடத்தினால் அதிக சீட்டு கிடைப்பதற்கு வாய்ப்பு இருந்திருக்கும். ஆனால் கிடைத்த அத்தனை வாய்ப்புகளையும் தவிர்த்து கொள்கை பிடிப்புக்காக நின்ற கட்சி விடுதலை சிறுத்தைகள் கட்சி.

கடந்த மூன்று ஆண்டுகளாக அதிமுகவுடன் கூட்டணி அமைக்க பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டது. அப்படி அதிமுகவுடன் நான் கூட்டணி வைத்திருந்தால் எடப்பாடி பழனிசாமி பிஜேபியுடன் கூட்டணி வைத்திருக்க மாட்டார். இன்று அரசியலில் தேர்தல் களமே மாறி இருக்கும். அதிமுகவில் உள்ள எடப்பாடி பழனிசாமி பிஜேபியுடன் கூட்டணி வைத்ததற்கு காரணம் உள்ளதா? ஒன்றுமே இல்லை.

ஆகையால் செய்யூர் தொகுதியில் போட்டியிடும் நமது வேட்பாளரை அனைவரும் ஆதரித்து பானை சின்னத்தில் வாக்களிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

தொடர்ந்து பேசிய அவர், தப்பி தவறி ஒரு வேளை எடப்பாடி பழனி்சாமி முதலமைச்சரானால் அவரின் பதவி இரண்டு மாதங்களுக்குள் பறிக்கப்படும். அவருக்கு பதிலாக எச் ராஜாவையோ அல்லது அண்ணாமலையையோ அல்லது பாஜக தலைவர் நயினார் நாகேந்திரனையோ தமிழக முதல்வராக தேர்வு செய்யும் நிலைக்கு பாஜக செல்லும். அதனால் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சியை தவிர்த்து மத சார்பற்ற முற்போக்கு கூட்டணியை மக்கள் ஆதரிக்க வேண்டும்.

செய்யூர் சட்டமன்ற தொகுதி வேட்பாளராக சிந்தனைச் செல்வனுக்கு பானை சின்னத்தில் பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வாக்களித்து வெற்றி பெறச் செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

நிகழ்ச்சியில் திமுக ஒன்றிய செயலாளர் சரவணன் உட்பட இந்தியா கூட்டணி கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Source link