அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மாவட்ட ரீதியாக நிர்வாகிகளிடம் ஆலோசனை செய்து கொண்டிருக்கிறார். தேர்தல் முடிவுகள் மற்றும் வரவுள்ள அடுத்தடுத்த தேர்தல்களை எப்படி எதிர்கொள்வது என்பது பற்றி ஆலோசனை மேற்கொண்டு வருகிறார் இபிஎஸ். இந்நிலையில் மதுரை கிழக்கு மாவட்ட அதிமுக நிர்வாகிகளுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை செய்தார். அதனை தொடர்ந்து ராஜன் செல்லப்பா செய்தியாளர்களிடம் பேசியுள்ளது கவனம் பெற்று கொண்டிருக்கிறது.
சட்டமன்ற தேர்தலில் அதிமுக மூன்றாம் இடத்துக்கு தள்ளப்பட்ட நிலையில், 47 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. இதனிடையில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்ற அதிமுக எம்எல்ஏக்கள் 6 பேர் இதுவரை ராஜினாமா செய்து, ஆளுங்கட்சியான தவெகவில் இணைந்துள்ளனர். இதனால் அதிமுகவின் சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது. இதனிடையில் அடுத்ததாக உள்ளாட்சி தேர்தலில் கவனம் செலுத்த வேண்டுமென அதிமுக நிர்வாகிகளிடம் அறிவுறுத்தி வருகிறார் இபிஎஸ்.
இந்நிலையில் எடப்பாடி பழனிசாமியுடனான ஆலோசனைக்கு பின்பாக செய்தியாளர்களிடம் பேசிய ராஜன் செல்லப்பா, பொதுச்செயலாளர் பல நாட்களாக மாவட்ட ரீதியாக ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். அந்த அடிப்படையில் மதுரை கிழக்கு மாவட்ட நிர்வாகிகளிடம் தேர்தல் முடிவுகள் குறித்தும், உள்ளாட்சி மற்றும் இடைத்தேர்தல் குறித்து கருத்துக்கள் கூற அழைத்துள்ளார்கள். இபிஎஸ்ஸை நேரில் சந்தித்து ஆலோசனைகளை பெற்றோம்.
அதிமுக மீண்டும் பீனிக்ஸ் பறவையாக மீண்டு வரும். ஏற்கனவே 47 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ள அதிமுக, மீண்டும் ஆட்சிக்கு வரும். அந்த நம்பிக்கையில் எங்களுடைய பணிகளை துவங்கியுள்ளோம் என தெரிவித்தார். தொடர்ந்து அவரிடம் மதுரை உள்ளிட்ட தென் மாவட்டங்களில் அதிமுக தோல்விக்கான காரணம் என்ன என்பது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பெரும்பாலும் இந்த முறை வெற்றி வாய்ப்பு சரியான முறையில் எதிர்ப்பு வாக்குகளை பெறவில்லை.
திமுகவை மட்டும் இபிஎஸ் விமர்சித்து வந்தார். இதன் காரணமாக எங்களுடைய ஓட்டு பிரிந்து போயுள்ளது. மக்களுடைய ஓட்டும் பிரிந்துள்ளது. ஆனாலும் அதிமுகவின் வாக்குகள் போதுமான அளவுக்கு எங்களுக்கு வந்துள்ளது என்றார். மேலும் புதிய இயக்கத்தின் வருகை காரணமாக எங்களுடைய வாக்குகள் சிதறி போயுள்ளன. மதுரை மாவட்டம் என்றைக்கும் அதிமுகவின் கோட்டையாக தான் உள்ளது. மீண்டும் எங்களுக்கு சாதகமான சூழ்நிலை வருவதற்கான வாய்புள்ளது.
நாங்கள் உழைப்பதற்கு தயாராக இருக்கிறோம் என்று நம்பிக்கையுடன் கூறினார் ராஜன் செல்லப்பா. அதோடு கட்சி தொண்டர்களை இயக்குவதற்கு தயாராக இருக்கிறோம். கழகத்தின் அடித்தளத்தை பலப்படுத்துவதற்கு தேவையான முன்னெடுப்புகளை செய்யவுள்ளோம் எனவும் கூறியுள்ளார். இவ்வாறு அதிமுகவின் தோல்வி குறித்து ராஜன் செல்லப்பா தெரிவித்துள்ள கருத்துக்கள் தற்போது கவனம் ஈர்த்து கொண்டிருக்கிறது.
இதனிடையில் இபிஎஸ் உடனான ஆலோசனையில் மதுரை மாநகர் மாவட்டத்தை சார்ந்த பகுதிச் செயலாளர் கந்தன், தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று எடப்பாடி பழனிசாமி பதவி விலக வேண்டுமென அவரிடம் நேரடியாக கூறியதாக ஊடகங்களில் செய்திகள் வெளியானது. இதனை அதிமுக திட்டவட்டமாக மறுத்துள்ளது. அந்த பெயரில் மதுரை மாநகர் மாவட்டத்தில் எந்தப் பகுதிச் செயலாளரும் இல்லையென அதிமுக விளக்கம் அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
