ராணிப்பேட்டை மாவட்டத்திலுள்ள சோளிங்கர் சட்டமன்றத் தொகுதியில், அ.ம.மு.க சார்பாக மாவட்டச் செயலாளரும் அந்தத் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ-வுமான என்.ஜி.பார்த்திபன் களமிறங்க முடிவு செய்திருந்தார். அ.தி.மு.க தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அ.ம.மு.க இணைவதற்கு முன்பாகவே, சோளிங்கர் தொகுதி வேட்பாளராக என்.ஜி.பார்த்திபனை அறிவித்துவிட்டார் டி.டி.வி.தினகரன்.
அதாவது, சோளிங்கரில் கடந்த ஆண்டு நடைபெற்ற மே தின பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய தினகரன், `யாருக்கும் விலை போகாத தங்கம் பார்த்திபன்தான் வரக்கூடிய சட்டமன்றத் தேர்தலில் இந்தத் தொகுதியின் அ.ம.மு.க வேட்பாளராகப் போட்டியிடுவார். தி.மு.க-வுக்கான சாவு மணியை இங்கிருந்து அடிப்போம்’ என்றார்.
இந்த நிலையில், என்.டி.ஏ கூட்டணியில் அ.ம.மு.க-வுக்கு பதினோரு தொகுதிகள் ஒதுக்கப்பட்டிருக்கின்றன. அதில், பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட சோளிங்கர் தொகுதி இடம்பெறவில்லை என்கிறார்கள். மாறாக, பா.ம.க-வுக்கு இந்தத் தொகுதி ஒதுக்கப்பட்டிருக்கிறது. இதனால், என்.ஜி.பார்த்திபன் கடும் அதிருப்தியில் இருக்கிறார். அவர்களின் ஆதரவாளர்களும் அ.தி.மு.க கூட்டணி மீது வெறுப்படைந்திருக்கிறார்கள்.

`ராணிப்பேட்டை மாவட்டத்திலுள்ள நான்கு தொகுதிகளில், பா.ம.க-வுக்கு ஆற்காடு தொகுதியும், அ.ம.மு.க-வுக்கு சோளிங்கர் தொகுதியும், அ.தி.மு.க-வுக்கு அரக்கோணம் தனித் தொகுதியும், மாவட்டத் தலைநகரை உள்ளடக்கிய ராணிப்பேட்டை தொகுதியும் ஒதுக்கப்படும்’ என்பதே என்.டி.ஏ மாவட்ட நிர்வாகிகள் தொடங்கி, அடிமட்ட தொண்டர்களாலும் உத்தேசிக்கப்பட்டது.
இவ்வளவு களேபரத்துக்கும் ஒரே காரணம், `பா.ம.க-வுக்கு கிடைக்க வேண்டிய ஆற்காடு தொகுதியை அ.தி.மு.க-வின் ராணிப்பேட்டை மேற்கு மாவட்டச் செயலாளரான எஸ்.எம்.சுகுமார் தான்னோன்றித்தனமாக கைப்பற்றியதே’ என்று கொதிக்கிறார்கள் என்.டி.ஏ கூட்டணியினர்.
கடந்த தேர்தலின்போது, ராணிப்பேட்டை தொகுதியில்தான் அ.தி.மு.க மாவட்டச் செயலாளர் எஸ்.எம்.சுமார், தி.மு.க-வின் சிட்டிங் அமைச்சரான ஆர்.காந்தியை எதிர்த்து போட்டியிட்டு தோல்வியடைந்தார். இந்தத் தேர்தலிலும், தோல்வி பயம் வந்துவிட்டதால், ராணிப்பேட்டை தொகுதியில் போட்டியிட விருப்பமில்லாமல், ஆற்காடு தொகுதிக்கு தாவிச் சென்றிருக்கிறார் சுகுமார் என்று அ.தி.மு.க நிர்வாகிகள், தொண்டர்களுமே விமர்சிக்கிறார்கள்.
