சென்னை:’பா.ம.க., தலைவர் அன்புமணி, அவரது மனைவி சவுமியா துாண்டுதலின்படி, என் மீது தாக்குதல் நடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என, ராமதாசின் தனிச் செயலர் சுவாமிநாதன், போலீசில் புகார் அளித்துள்ளார்.
சென்னை, பாலவாக்கத்தில் வசித்து வரும் அவர், டி.ஜி.பி., அலுவலகத்தில் அளித்துள்ள புகார்: நான் பா.ம.க., நிறுவனர் ராமதாசின் தனிச் செயலராக உள்ளேன். கட்சி சார்பாக, ராஜ்யசபா வேட்பாளராக, நேற்று முன்தினம் மனு தாக்கல் செய்தேன். மனு மீதான பரிசீலனை நடந்த போது அதில் பங்கேற்றேன். அந்த நிகழ்வு முடிந்து, மதியம் 1:00 மணியளவில், சென்னை காமராஜர் சாலை வழியாக வீடு திரும்பினேன்.
எனது கார், நேப்பியர் பாலம் அருகே சென்றபோது, இரு சக்கர வாகனத்தில் பின் தொடர்ந்து வந்த இரண்டு பேர் வழிமறித்து, என் முகத்தில் பலமாக குத்தி தாக்கினர். இதனால், எனக்கு கண் அருகே காயம் ஏற்பட்டு உள்ளது; கண் பார்வையிலும் குறைபாடு ஏற்பட்டு உள்ளது.
பா.ம.க., தலைவர் அன்புமணி மற்றும் அவரின் மனைவி சவுமியா துாண்டுதலின்படி, என் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. என் உயிருக்கு ஆபத்து இருப்பதாக, ஏற்கனவே புகார் அளித்து உள்ளேன். என் மீது தாக்குதல் நடத்திய நபர்கள் மீது, சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
