`அப்போ திரைச்சீலை… இப்போ பேனர்' – நாற்றமெடுத்த வாய்க்கால்; பிரதமருக்காக மறைத்த அதிகாரிகள்

புதுச்சேரியில் ஏப்ரல் 9-ம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெறுகிறது. வாக்குப்பதிவுக்கு குறைவான நாட்கள் இருப்பதால் அரசியல் கட்சிகளின் பிரசாரங்கள் உச்சகட்டத்தில் நடந்து கொண்டிருக்கின்றன.

தேசிய, மாநில கட்சிகளின் தலைவர்கள் புதுச்சேரிக்கு படையெடுத்து வருகிறார்கள்.

பேனர் வைத்து மறைக்கப்பட்டிருக்கும் வாய்க்கால்
பேனர் வைத்து மறைக்கப்பட்டிருக்கும் வாய்க்கால்

அதன்படி புதுச்சேரியில் பா.ஜ.க, என்.ஆர்.காங்கிரஸ், அதிமுக உள்ளிட்ட என்.டி.ஏ கூட்டணி வேட்பாளர்களுக்கு வாக்கு சேகரிக்க இன்று மாலை புதுச்சேரிக்கு வருகிறார் பிரதமர் மோடி.

அதற்காக டெல்லியில் இருந்து தனி விமான மூலம் சென்னை வரும் அவர், அங்கிருந்து ஹெலிகாப்டரில் மாலை நான்கு மணிக்கு புதுச்சேரி விமான நிலையத்திற்கு வந்தடைகிறார்.

அங்கிருந்து காரில் அஜந்தா தியேட்டர் சந்திப்புக்கு வரும் அவர், திறந்த வாகனத்தில் ராஜா தியேட்டர் சந்திப்பு வரை நடைபெறும் ரோடு ஷோவில் கலந்து கொள்கிறார்.

புதுச்சேரி விமான நிலையத்திலிருந்து அவர் வரும் வழியில் கருவடிக்குப்பம் பகுதியில் இருக்கும் கழிவு நீர் வாய்க்கால், சுத்தப்படுத்தப்படாமல் துர்நாற்றம் வீசிக்கொண்டிருந்தது.

பேனர் வைத்து மறைக்கப்பட்டிருக்கும் வாய்க்கால்
பேனர் வைத்து மறைக்கப்பட்டிருக்கும் வாய்க்கால்

அதை சரி செய்ய வேண்டும் என்று அப்பகுதி மக்கள் புகாரளித்தும் அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை.

அந்த வாய்க்கால் பிரதமர் மோடி வரும் வழியில் இருப்பதால், இன்று அவசர அவசரமாக வண்ண பேனர்களை வைத்து மறைத்திருக்கிறார்கள். 2023-ல் இந்தியக் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு புதுச்சேரிக்கு வருகை தந்தபோது, அவர் செல்லும் பாதையில் இருந்த உப்பனாறு வாய்க்கால் அசுத்தமாக இருந்ததால், அதை மறைக்க அதிகாரிகள் திரைச்சீலை அமைத்த சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது .

Source link