புதுடில்லி: அ. தி.மு.க., பொதுச்செயலரும் முன்னாள் முதல்வருமான பழனிசாமி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை டில்லியில் சமீபத்தில் சந்தித்தார். ஈரான் போர் பதற்றத்தால், பாதுகாப்புக்கான அமைச்சரவைக் கூட்டம் தினமும் நடக்கிறது. இதில் அமித் ஷா பங்கேற்க வேண்டும். அவரால் சென்னை வர முடியாததால், பழனிசாமி டில்லிக்கு அழைக்கப்பட்டார்.
அமித் ஷாவை இரவில் சந்தித்தார் பழனிசாமி. சிரித்த முகத்துடன் இருந்தவரை பார்த்த அமித் ஷா, ‘பன்னீர்செல்வம் கதி என்னாச்சு பார்த்தீர்களா? அவரை தி.மு.க., பக்கம் தள்ளிவிட்டீர்களே’ என சொல்லி சிரித்ததுடன், ‘பன்னீர்செல்வம் மீது எங்களுக்கு நம்பிக்கையே இல்லை; எந்த ஆட்சியை அகற்ற வேண்டும் என மேடம் பாடுபட்டாரோ, அங்கேயே போய் சரண்டர் ஆகிவிட்டாரே’ என்றாராம் அமித் ஷா.
அமித் ஷா வீட்டிற்கு இரவு நேரத்தில் யார் வந்தாலும், சாப்பிட்டுத் தான் ஆக வேண்டும். பழனிசாமிக்காக அவல் உப்புமா தயாரித்து வைத்திருந்தனர். அதன் மீது ஓமப்பொடி துாவப்பட்டிருந்தது. உடன், குஜாராத்தி ஸ்டைலில் இனிப்பு சட்னியும் இருந்தது.
‘சாப்பிடுங்கள்’ என்றதும், ‘நான் ஏற்கனவே சாப்பிட்டு விட்டேன்’ என்றாராம் பழனிசாமி. ‘அவல் உடம்பிற்கு நல்லது’ என அமித் ஷா சொல்ல, பழனிசாமி சிறிது சாப்பிட்டாராம். பின், இருவரும் தனியாக நெடுநேரம் பேசினர்.
