வாஷிங்டன்: வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோ கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், அந்நாட்டை அமெரிக்காவின் 51வது மாகாணமாக மாற்றுவது குறித்து அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தன் விருப்பத்தை தெரிவித்துள்ளார்.
தென் அமெரிக்க நாடான வெனிசுலாவிற்குள் அதிரடியாக நுழைந்த அமெரிக்க ராணுவம் அந்நாட்டு அதிபர் நிக்கோலஸ் மதுரோ மற்றும் அவரது மனைவி சிலியா புளோராவை கடந்த ஜன., 3ல் கைது செய்தது. போதைப்பொருள் பயங்கரவாத குற்றச்சாட்டின் பேரில் அவர்கள் இருவரும் அமெரிக்காவின் நியூயார்க் சிறையில் அடைக்கப்பட்டனர்.
அந்நாட்டின் துணை அதிபர் டெல்சி ரோட்ரிக்ஸ் இடைக்கால அதிபராக உள்ளார். இந்நிலையில், சமூக வலைதள பதிவில், ‘வெனிசுலா ஒரு அற்புதமான நாடு. அங்கு மிகப்பெரிய அளவில் வளங்கள் உள்ளன. அதை நாம் சரியாக நிர்வகித்தால், அது அமெரிக்காவின் 51வது மாகாணமாக மிகச் சிறப்பாக இருக்கும்’ என, டிரம்ப் கூறியுள்ளார்.
ஏற்கனவே, வட அமெரிக்க நாடான கனடா, ஐரோப்பிய நாடான டென்மார்க்கின் நிர்வாகத்தின் கீழுள்ள உலகின் மிகப் பெரிய தீவு நாடான கிரீன்லாந்து ஆகியவற்றை, அமெரிக்காவின் மாகாணங்களாக இணைக்க வேண்டும் என்று டிரம்ப் கூறிவந்தார். தற்போது வெனிசுலாவையும் மாகாணமாக்க டிரம்ப் விருப்பம் தெரிவித்துள்ளார்.
