அமெரிக்கா- ஈரான் அமைதிப் பேச்சு தோல்வி

நமது நிருபர்

பாகிஸ்தானில் நடந்த அமெரிக்கா – ஈரான் அமைதிப் பேச்சு தோல்வி அடைந்தது. உடன்பாடு ஏற்படவில்லை என அமெரிக்க துணை அதிபர் ஜேடி வான்ஸ் தெரிவித்தார்.

அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து ஈரானுக்கு எதிராக பெரிய அளவிலான தாக்குதலை கடந்த பிப்., 28ல் துவக்கின. இந்த தாக்குதலில், ஈரான் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி உட்பட முக்கிய தலைவர்கள் கொல்லப்பட்டனர். இருப்பினும், சண்டையில் இருந்து ஈரான் பின் வாங்கவில்லை; மேற்கு ஆசிய பிராந்தியத்தில் உள்ள அமெரிக்க தளங்களை தாக்கியது.

கச்சா எண்ணெய் கப்பல்கள் செல்லும் அப்பிராந்தியத்தின் முக்கிய கடல் பாதையான ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் முடக்கியது. இதனால், சர்வதேச அளவில் அனைத்து நாடுகளும் பொருளாதார அழுத்தத்தை சந்தித்தன.

இந்நிலையில், கடந்த 7ம் தேதி ‘ஈரான் நாகரிகத்தையே அழித்துவிடுவேன்’ என அதிபர் டிரம்ப் கொக்கரித்தார்; அதற்காக கெடு விதித்திருந்தார். இதனால், ஈரான் மீது அணு ஆயுத தாக்குதல் நடத்தப்படுமோ என்ற பதற்றம் எழுந்தது.

கெடு முடிவதற்கு சில மணி நேரங்களுக்கு முன், பாகிஸ்தான் மற்றும் சீனாவின் மத்தியஸ்த முயற்சியில் அமெரிக்கா மற்றும் ஈரான் இரு வார தற்காலிக போர் நிறுத்தத்துக்கு ஒப்புக்கொண்டன. இதையடுத்து, அமெரிக்கா மற்றும் ஈரான் தரப்பை இஸ்லாமாபாதில் பேச்சு நடத்த, பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் அழைப்பு விடுத்தார். இதை இரு தரப்பும் ஏற்றன.

பேச்சுவார்த்தை

ஈரான் பார்லிமென்ட் சபாநாயகர் முகமது பாகர் காலிபாப் மற்றும் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி தலைமையிலான குழு நேற்று முன்தினமே இதற்காக இஸ்லாமாபாத் வந்தது. அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வான்ஸ் தலைமையிலான அமெரிக்க குழுவினர் நேற்று காலை இஸ்லாமாபாத் வந்தனர். ஈரான் மற்றும் அமெரிக்கா தரப்பினர் தனித் தனியே பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீபை நேற்று சந்தித்து பேச்சு நடத்தினர்.

தோல்வி

இதில், ஈரான் தரப்பில் தெரிவிக்கப்பட்ட முன்வைப்புகளில் சிலவற்றை அமெரிக்கா ஏற்றுக் கொண்டது. இதன் தொடர்ச்சியாக, அமெரிக்காவுடன் நேரடியாக பேசுவதற்கு ஈரான் ஒப்புக் கொண்டது. இவ்வாறு மாறி மாறி கூட்டங்கள் நடந்தன. இதனால், அமைதி பேச்சுக்கான கூட்டம் ஐந்து மணி நேரம் தாமதமாகி மாலை துவங்கி 20 மணி நேரமாக நடந்தது.

எனினும் இதில் முடிவு எதுவும் ஏற்படவில்லை. அமெரிக்காவின் நிபந்தனைகளை ஏற்க ஈரான் குழுவினர் மறுத்துவிட்டனர். இதையடுத்து அமைதிப் பேச்சு தோல்வி அடைந்தது. பேச்சில் உடன்பாடு ஏற்படவில்லை எனஅமெரிக்க துணை அதிபர் ஜேடி வான்ஸ் தெரிவித்தார்.

ஜே.டி.வான்ஸ் பேட்டி

நிருபர்களிடம் துணை அதிபர் ஜேடி வான்ஸ் கூறியதாவது: அமைதிப் பேச்சுவார்த்தையில் எந்த முடிவும் எட்டப்படவில்லை. பாகிஸ்தானில் 21 மணி நேரமாக நடைபெற்ற அமைதி பேச்சு எவ்வித முடிவும் இன்றி நிறைவு பெற்றது. அமெரிக்காவின் நிபந்தனைகளை ஈரான் ஏற்க மறுப்பு தெரிவித்துவிட்டது. எங்கள் குழு அமெரிக்கா திரும்புகிறது, என்றார். பேச்சு தோல்வி அடைந்துள்ளதால் மீண்டும் போர் நடக்கும் சூழல் உருவாகி உள்ளது.

Source link