திருப்பூர்: அமெரிக்காவின் லாஸ் வேகஸ் வர்த்தக கண்காட்சி அரங்கில், ஆக., 10ம் துவங்கி மூன்று நாட்கள் ‘மேஜிக்’ சர்வதேச ஜவுளி கண்காட்சி நடைபெறவுள்ளது.இந்திய ஆடைகளை இறக்குமதி செய்வதில், 35 சதவீத பங்களிப்புடன் அமெரிக்கா முதலிடத்தில் இருக்கிறது.
கொரோனாவுக்கு பின், இந்தியா – அமெரிக்கா இடையே வர்த்தகம் வளர்ச்சி பெற்று வந்தது. கடந்தாண்டு, இறக்குமதி வரியுடன், கூடுதல் கட்டணம் கடுமையாக உயர்த்தப்பட்டதால், செப்., துவங்கி, டிச., மாதம் வரை, ஏற்றுமதி பாதிக்கப்பட்டது.
பரஸ்பர பேச்சுவார்த்தையால், பிப்., மாதம் வரி உயர்வு குறைக்கப்பட்டது. அதன்பின், அமெரிக்க சுப்ரீம் கோர்ட் தலையீட்டால், இயல்புநிலை திரும்பிஉள்ளது.
இந்நிலையில், அமெரிக்காவில் ஆண்டுதோறும் நடக்கும், ‘மேஜிக்’ சர்வதேச ஜவுளி கண்காட்சி ஆக., 10ல் துவங்கி மூன்று நாட்கள் நடக்குமென அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து ஆயத்த ஆடை ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில் (ஏ.இ.பி.சி.,) அதிகாரிகள் கூறுகையில், ‘அமெரிக்க வரி உயர்வு விவகாரத்தில் சுமுக தீர்வு கிடைத்துள்ளது; தற்போது, சாதகமான சூழல் நிலவும் நிலையில், ‘மேஜிக்’ சர்வதேச ஜவுளி கண்காட்சியில் அரசு மானிய உதவியுடன் பங்கேற்க விரும்பும் இந்திய ஏற்றுமதியாளர்கள், மே 12ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்’ என்றனர்.
அமெரிக்க ஆடை இறக்குமதி, 2023ல், 6.69 லட்சம் கோடி ரூபாய்; 2024ல், 7.11 லட்சம் கோடி ரூபாய் கடந்தாண்டில் 7.35 கோடி ரூபாய் அளவுக்கு ஆடை இறக்குமதி நடந்துள்ளதாக தகவல் அமெரிக்காவுக்கு இந்தியாவின் ஏற்றுமதியும், 5.90 சதவீதத்தில் இருந்து 6.30 சதவீதமாக உயர்வு.
