சத்யராஜ் – மணிவண்ணன் கூட்டணியில், 1994-ல் வெளிவந்த ‘அமைதிப்படை’ திரைப்படம் வருகிற ஏப்ரல் 10-ம் தேதி ரீரிலீஸ் ஆகிறது.
ரீரிலீஸ் டிரெண்டில், பல கல்ட் கிளாசிக் திரைப்படங்கள் ரீரிலீஸ் செய்யப்பட்டுக் கொண்டிருக்கின்றன. அந்த வரிசையில், இப்படமும் ரீரிலீஸ் ஆகிறது.
‘அமைதிப்படை’ திரைப்படம் பற்றிய பல சுவாரஸ்யமான தகவல்களை படக்குழுவினர் செய்தியாளர்களிடையே பகிர்ந்திருக்கிறார்கள்.

சத்யராஜ் பேசுகையில், “நான் 75 படம் வில்லனாக நடிச்சிட்டு ஹீரோவானேன். ஹீரோவான பிறகு என்னுடைய அத்தனை படங்களும் ஹிட்தான். ‘உடன்பிறப்பு’ படத்தோட ஷூட்டிங் நடக்கும்போதுதான், இந்தக் கதையை மணிவண்ணன் சார் என்னுடைய வீட்டுக்கு வந்து சொன்னாரு.
அப்போ நான் அவர்கிட்ட, ‘தலைவரே, நீங்கதான் எனக்கு லைஃப் கொடுத்தீங்க. மறுபடியும் வில்லன் பண்ணணுமா’னு கேட்டேன். இந்தப் படத்துக்கு 70 நாள் கால்ஷீட் போச்சு. நிறைய ஜூனியர் ஆர்டிஸ்ட் வச்சு மணிவண்ணன் எடுத்தாரு.
‘எதுக்காக சொந்தப் படத்துக்கு இவ்வளவு செலவு பண்றீங்க’னு கேட்டேன். அவர், ‘இந்தப் படத்தோட அறிவிப்பு வந்ததும் கண்ண பின்னானு வித்துட்டேன். 40 நாள் மட்டும் ஷூட் பண்ணினால், தப்பா நினைச்சுப்பாங்க’னு சொன்னாரு.
அதுக்காக அத்தனை நாள் ஷூட் பண்ணினார். ‘அமைதிப்படை’ ஒரு கல்ட் ஃபிலிம். அதுக்கு முன்னும் பின்னும் இப்படியான ஒரு படம் வரல. 2கே கிட்ஸ்லாம் எனக்கு ஃபேன் கிடையாது.
நான் இருபது வருஷமாக கேரக்டர் ரோல்களில் நடிச்சிட்டு வர்றேன். ரஞ்சிதா கைலாசாவுல இருக்கிறதாக சொல்றாங்க. அப்படின்னு ஒரு நாடு இருக்கிறதாக சொல்றாங்க.
அவங்கதான் அந்த நாட்டுக்கு பிரதமர்னு சொல்றாங்க. மூணு முதலமைச்சர்கள் நடிச்ச படம் இங்க இருக்கு.
ரஞ்சிதா பிரதமர்ங்கிறது உண்மைனா, ஒரு பிரதமர் நடிச்ச ஒரே படம் இதுதான்” என்றவர், “ஒரு சமயத்துல நான் ஹீரோவாக நடிச்ச அத்தனை படங்களும் ஒவ்வொன்றாக ஃப்ளாப் ஆகிட்டு வந்தது.
அப்போ எனக்கு இறங்குமுகம்தான். அந்தச் சமயத்துல விஜய் ஒரு பேட்டியில, ‘உங்களுக்குப் பிடிச்ச ஹீரோ யாரு’னு கேட்டதுக்கு, ‘அப்படி யாரும் இல்ல. ஆனா, சில சமயங்கள்ல ஒரு வசனத்தை சத்யராஜ் சார் எப்படிப் பேசுவார்ன்னு யோசிச்சு பார்ப்பேன். ‘அமைதிப்படை’ சத்யராஜ் மாதிரி ஒரு கேரக்டர் செய்யணும்னு எனக்கு ஆசை’னு பேசியிருந்தாரு. அதுக்கு நான் விஜய்க்கு கால் பண்ணி நன்றி சொன்னேன்” எனப் பகிர்ந்திருக்கிறார்.
