புதுடில்லி: உத்தர பிரதேசத்தின் அயோத்தியில் உள்ள ராமர் கோவிலில், 150 கிலோ எடையுள்ள தங்கமுலாம் பூசப்பட்ட ஸ்ரீ ராம யந்திரத்தை ஜனாதிபதி திரவுபதி முர்மு பிரதிஷ்டை செய்தார்.
உ.பி.,யின் அயோத்தியில் ஸ்ரீராமஜென்ம பூமி தீர்த்தஷேத்ர அறக்கட்டளை சார்பில், பிரமாண்டமான ராமர் கோவில் அமைந்துள்ளது. கோவிலின் இரண்டாவது தளத்தில், வேத கணிதத்தின் அடிப்படையிலும், பகவான் ராமரின் இருப்பை உணர்த்தும் வகையிலும் யந்திர தகடு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.
வேத மந்திரங்கள் பொறிக்கப்பட்ட, 150 கிலோ எடையுள்ள தங்க முலாம் பூசப்பட்ட சிறப்பு வாய்ந்த, ஸ்ரீ ராம யந்திர தகடை, ஜனாதிபதி திரவுபதி முர்மு நேற்று முன்தினம் பிரதிஷ்டை செய்தார். பின், தரை தளத்தில் உள்ள பால ராமருக்கு தீபராதனை காட்டி வழிபட்டார்.
அப்போது அவர் பேசியதாவது: இந்திய வரலாற்றில் பகவான் ராமருக்கு பிரமாண்ட கோவில் கட்டப்பட்டு திறக்கப்பட்டது பொற்கால நிகழ்வு. ராமருக்கு சொர்க்கத்தைவிட அயோத்தி நகரமே மிகவும் பிடித்தமானது. இதை துளசிதாசரின் ராம் சரித் மானஸ் எனும் புனித நுால் தெரிவிக்கிறது.
தற்போது பிரதிஷ்டை செய்யப்பட்ட ஸ்ரீ ராம யந்திரமானது, காஞ்சி காமகோடி ஜகத்குரு சங்கராச்சாரிய சுவாமிகளால் அயோத்தி ராமர் கோவிலுக்கு வழங்கப்பட்டு உள்ளது. சங்கரருக்கும், ஸ்ரீ ராமருக்கும் இடையிலான தொடர்பு, அந்தந்த மரபுகளைப் பின்பற்றுபவர்களால் இன்றும் செம்மையாக பேணிகாக்கப்பட்டு வருகிறது.
இந்த ஸ்ரீ ராம யந்திரம், அவ்விருவருக்கும் இடையிலான ஆழ்ந்த அன்பை வெளிப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது. ராமரின் அருளால் நம் நாடு, 2047ம் ஆண்டுக்குள் அல்லது அதற்கு முன்னரே, அனைவரையும் உள்ளடக்கிய சமூகமாகவும், வளர்ந்த நாடாகவும் மாறும். இவ்வாறு அவர் பேசினார்.
