அரியலூர்: அரியலூரில் ஓட்டு கேட்டு வேட்பாளர்கள் யாரும் ஊருக்குள் வர வேண்டாம் என்று பிச்சனூர் கிராம மக்கள் தெரு தெருவாக போஸ்டர் ஒட்டிய சம்பவம் அரசியல் கட்சியினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சட்டசபை தேர்தலையொட்டி அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிர ஓட்டு சேகரிப்பில் ஈடுபட்டு வரும் நிலையில், அரியலூர் மாவட்டம் பிச்சனூர் ஊர் மக்களின் செயல் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. தங்களது கிராமத்திற்கு எந்தவித அடிப்படை வசதிகளும் செய்து தரவில்லை எனக் கூறி ஒட்டுமொத்த கிராமமே தேர்தலை புறக்கணித்துள்ளது.
இது தொடர்பாக போஸ்டர் ஒட்டி தங்களின் எதிர்ப்பை பதிவு செய்த மக்கள், ‘வேட்பாளர்கள் யாரும் ஊருக்குள் வர வேண்டாம்,’ எனக் குறிப்பிட்டுள்ளனர்.
அந்தப் போஸ்டரில், ‘அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் வட்டம் ஜெயங்கொண்டம் ஒன்றியத்திட்பட்ட பிச்சனூர் ஊராட்சியில் சாலை வசதி, தெருவிளக்கு வசதி, சாலை மற்றும் நீர்வள ஆக்கிரமிப்பு அகற்றுதல், மழைநீர் வடிகால் வசதி உள்ளிட்ட பல்வேறு அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி கடந்த 5 ஆண்டுகளாக பலமுறை மனுக்கள் அளித்தும் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்காததையொட்டி வரும் ஏப்ரல் 23ம் தேதி நடைபெறும் தேர்தலை புறக்கணிப்போம். வேட்பாளர்கள் யாரும் ஓட்டு கேட்டு ஊருக்குள் வர வேண்டாம்,’ எனக் குறிப்பிட்டுள்ளனர்.
