புதுடெல்லி: அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழகத்தின் மாணவர் விடுதியில் காவல்துறை நடத்திய சோதனையில், ஆயுதங்கள், தோட்டாக்கள், கள்ள நோட்டுகள் மற்றும் சந்தேகத்திற்கிடமான ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
உத்தரப்பிரதேசத்தின் அலிகர் முஸ்லிம் பல்கலைகழகத்துக்கு அருகில் உள்ள எம்.எம் டவர் பகுதியில் கடந்த வாரம் துப்பாக்கி சூடு சம்பவம் நடந்தது. இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த அலிகர் காவல்நிலையத்தினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக, அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழகத்தின் சர் ஜியாவுத்தீன் மாணவர் விடுதில் நேற்று முன்தினம் சோதனை நடத்தப்பட்டது.
இந்த சோதனையில் இரண்டு 32 நாட்டுத் துப்பாக்கி ரவைகள், நான்கு 315 தோட்டாக்கள், ஒரு 9 மி.மீ தோட்டா, நான்கு 12 மி.மீ தோட்டாக்களை போலீசார் கண்டெடுத்தனர். மேலும், தலா 100 ரூபாய் மதிப்புள்ள ஆறு கள்ள நோட்டுகளும், பல சந்தேகத்திற்கிடமான ஆவணங்களும் பறிமுதல் செய்யப்பட்டன. காவல்துறை வருவதற்கு முன்பே அங்கிருந்த சந்தேக நபர்கள் தப்பி ஓடிவிட்ட நிலையில், மாணவர் விடுதியில் சட்டவிரோதமாகத் தங்கியிருந்தவர்களைத் தேடும் பணி நடைபெற்று வருகிறது.
