அ.தி.மு.க., கூட்டணியில் புதிய வரவுகள் இனி இல்லை: பழனிசாமி

”தமிழகத்தில் அ.தி.மு.க., கூட்டணிக்கு, இனிமேல் யாரும் வரப் போவதில்லை. பெரும்பாலான கட்சிகள், எந்தெந்த கூட்டணியில் சேர வேண்டுமோ, அங்கு போய் இணைந்து விட்டன. அதனால், தேர்தலை நோக்கி பயணிக்க வேண்டியது தான்,” என, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி கூறினார்.

டில்லி சென்றிருந்த அ.தி.மு.க., பொதுச் செயலர் பழனிசாமி, நேற்று முன்தினம் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்தார். அதை தொடர்ந்து, நேற்று சென்னை திரும்பும் முன், டில்லி விமான நிலையத்தில் அவர் அளித்த பேட்டி:

வெற்றி வாய்ப்பு

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்து, தமிழக அரசியல் குறித்து ஆலோசித்தேன். ஐந்து மாநில தேர்தல் பணியால் அமித் ஷாவுக்கு வேலை அதிகம். தேர்தல் முடியும் வரை என்னால் டில்லி வர முடியாது என்பதால், முன்கூட்டியே அவரை சந்தித்தேன். தி.மு.க., கூட்டணி போல் எங்கள் கூட்டணி இல்லை.

நாங்கள் அமைதியாக கூட்டணி பேச்சை முடித்து, தொகுதி பங்கீடு பட்டியலை வெளியிடுவோம். எங்கள் தே.ஜ., கூட்டணியில், ஒருவருக்கு ஒருவர் விட்டுக் கொடுத்து, யார் யாருக்கு, எந்தெந்த இடத்தில் வெற்றி வாய்ப்பு இருக்கிறதோ, அந்த தொகு திகளை ஒதுக்குவோம். நான்கு நாட்களில் எல்லாம் இறுதி செய்யப்படும்.

பிரசாரம்

த.வெ.க.,வுடன் கூட்டணி பேச்சு நடத்தவில்லை என, ஏற்கனவே தெளிவாக சொல்லி விட் டேன். த.வெ.க., தலைவர் விஜயும் சொல்லி விட்டார். எங்கள் கூட்டணி கட்சி தலைவர்கள் யாரும் த.வெ.க.,வினரை சந்திக்கவில்லை; அவர்களும் எங்களை சந்திக்கவில்லை.

தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் பெரும்பாலும், எந்தெந்த கூட்டணியில் இணைய வேண்டுமோ அங்கு இணைந்து விட்டன. தி.மு.க.,வுடன் கூட்டணி வைக்க வேண்டிய கட்சிகள், அந்த கூட்டணியில் இணைந்து விட்டன. அ.தி.மு.க.,வுடன் கூட்டணி வைக்க வேண்டிய கட்சிகள், எங்களுடன் சேர்ந்து விட்டன.

இனிமேல், யாரும் அ.தி.மு.க., கூட்டணிக்கு வரப் போவதில்லை. இனி தேர்தலை நோக்கி பயணிக்க வேண்டியது தான். ஏற்கனவே, எக்ஸ்பிரஸ் வேகத்தில் அ.தி.மு.க., பிரசாரம் போய் கொண்டிருக்கிறது.

தமிழகத்தில் தே.ஜ., கூட்டணிக்கு அ.தி.மு.க., தான் தலைமை. தொகுதிபங்கீடு முடிந்த பின்னரே, பிரசாரத்திற்கு யார் யார் வருவர் என்பது முடிவாகும். தமிழக அரசியல் குறித்து அமித் ஷாவுடன் ஆலோசிக்க, பா.ம.க., தலைவர் அன்புமணி, அ.ம.மு.க., பொதுச்செயலர் தினகரன் ஆகியோர் டில்லி வந்துள்ளனர்.

அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் சண்முகம், நடிகை பற்றி வாய் தவறி பேசியதை உணர்ந்து மன்னிப்பு கேட்டு விட்டார். அதன் பின், அதை பற்றி பேசுவது பொருத்தமாக இருக்காது. தேர்தல் அறிக்கையை இறுதி செய்து வருகிறோம். இன்னும் ஒரு வாரத்தில், அ.தி.மு.க., தேர்தல் அறிக்கை வெளியிடப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

மத்திய அமைச்சர் பீயூஷ் கோயல் இன்று சென்னை வருகிறார்

தே.ஜ., கூட்டணிக்கு த.வெ.க., வராது என்பது உறுதியான நிலையில், தொகுதி பங்கீடு பேச்சை துவக்க, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி முடிவு செய்துள்ளார். இதை தொடர்ந்து, தமிழகத்துக்கான பா.ஜ., தேர்தல் பொறுப்பாளரும், மத்திய அமைச்சருமான பீயூஷ் கோயல் இன்று சென்னை வருகிறார்.
இன்று மதியம் 12:00 மணிக்கு, பழனிசாமி மற்றும் அ.தி.மு.க., நிர்வாகிகளை, பீயூஷ் கோயல், தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன், பா.ஜ., மேலிட பொறுப்பாளர் அரவிந்த் மேனன் உள்ளிட்டோர் சந்தித்து, தொகுதி பங்கீடு பேச்சை துவக்குகின்றனர்.
அதை தொடர்ந்து, பா.ம.க., – அ.ம.மு.க., – த.மா.கா., – புதிய நீதி கட்சி, இந்திய ஜனநாயக கட்சி, புரட்சி பாரதம் உள்ளிட்ட கூட்டணி கட்சிகளின் தலைவர்களுடன் பேச்சு நடக்கிறது. வரும் செவ்வாய் கிழமைக்குள் தொகுதி பங்கீட்டை முடிக்க, தே.ஜ., கூட்டணி முடிவு செய்துள்ளது.

– நமது நிருபர் –

Source link