சென்னை: அ.தி.மு.க, உடன் தொகுதி பங்கீடு குறித்து பேச, பா.ஜ., தேர்தல் பொறுப்பாளரும் மத்திய அமைச்சருமான பீயூஷ் கோயல், நேற்று சென்னை வருவதாக தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், அவர் வரவில்லை.
இதனால் தேசிய ஜனநாயக கூட்டணியில், தொகுதி பங்கீடு பேச்சை துவக்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
தமிழக தேசிய ஜனநாயக கூட்டணியில், இன்னும் தொகுதி பங்கீடு பேச்சு துவக்கப்படவில்லை. தங்கள் கூட்டணியில் த.வெ.க., இணையும் என்று பா.ஜ., மேலிடம் எதிர்பார்த்து காத்திருந்தது.
ஆனால், த.வெ.க., வருவதற்கு வாய்ப்பில்லை என தெரிய வந்திருக்கும் நிலையில், நேற்று முதல் தொகுதி பங்கீட்டு பேச்சை துவக்க, அ.தி.மு.க., முடிவு செய்தது.
தே.ஜ., கூட்டணியில் தொகுதி பங்கீடு பேச்சை நேற்று துவக்கி, வரும் 24ம் தேதிக்குள் நிறைவு செய்ய முடிவு செய்யப்பட்டிருந்தது. இதற்காக மத்திய அமைச்சரும், பா.ஜ., தேர்தல் பொறுப்பாளருமான பீயூஷ் கோயல், நேற்று சென்னை வர இருந்தார்.
இதனால், நேற்று காலை சென்னை வர இருந்த பீயூஷ் கோயலை வரவேற்க வருமாறு, தமிழக பா.ஜ., மூத்த நிர்வாகிகளுக்கு முன்கூட்டியே தகவல் தெரிவிக்கப்பட்டது.
ஆனால் அதன்பின், ”பீயூஷ் கோயல் சென்னை வரவில்லை. அவரை வரவேற்பதற்காக, விமான நிலையம் வர வேண்டாம்,” என, பா.ஜ., நிர்வாகிகளுக்கு, டில்லியில் இருந்து தகவல் தெரிவிக்கப்பட்டது.
திட்டமிட்டபடி பீயூஷ் கோயல் சென்னை வராததால், கூட்டணி கட்சிகள் இடையே, தொகுதி பங்கீடு பேச்சை துவக்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து, தமிழக பா.ஜ., நிர்வாகி ஒருவர் கூறுகையில், ”வளைகுடா நாடுகளில் ஏற்பட்டுள்ள போர் பதற்ற சூழலில், இயற்கை எரிவாயு உள்ளிட்ட விஷயங்களில் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
இதை போக்குவது தொடர்பாக, மத்திய அரசின் உயர்மட்ட அளவில் நடக்கும் கூட்டங்களில், மத்திய தொழில் மற்றும் வர்த்தக துறை அமைச்சர் பீயூஷ் கோயல் பங்கேற்க வேண்டியுள்ளது.
”இதனால், அவர் சென்னை வரவில்லை. சில தினங்களில் அவர் சென்னை வருவார். அதன்பின், அ.தி.மு.க., உடன் பேச்சு நடத்தப்படும்,” என்றார்.
