சென்னை: பெண்கள் பற்றி சர்ச்சையாக பேசிய, அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர்கள் சி.வி.சண்முகம், திண்டுக்கல் சீனிவாசன், எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆகியோர் மீது, நக்சல் ஆதரவு அமைப்பினர் தாக்குதல் நடத்த திட்டமிட்டு இருப்பதால், அவர்கள் மூவருக்கும் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
சமீபத்தில், அ.தி.மு.க., சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. அதில் பேசிய, அக்கட்சியின் முன்னாள் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், சி.வி.சண்முகம் மற்றும் எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆகியோர், பெண்கள் பற்றி சர்ச்சையாக பேசினர்; தங்களின் பேச்சுக்கு வருத்தமும் தெரிவித்து விட்டனர்.
ஆனால், அவர்கள் மீது தாக்குதல் நடத்த, நக்சல் ஆதரவு கும்பல்கள் சதி திட்டத்துடன் செயல்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இதுகுறித்து, உளவுத்துறை மற்றும் கியூ பிரிவு போலீசார், அரசுக்கு அறிக்கை தாக்கல் செய்து உள்ளனர்.
அவர்கள் கூறியதாவது:
முன்னாள் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், சி.வி.சண்முகம் மற்றும் எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆகியோர் பங்கேற்கும் தேர்தல் பிரசார மேடைகளில், அவர்கள் மீது செருப்பு மற்றும் கற்களை வீசுவது, பெண்களால் அவர்களின் வாகனங்களை முற்றுகையிடுவது உள்ளிட்ட செயல்களில் ஈடுபட, நக்சல் ஆதரவு குழுக்கள் திட்டமிட்டு உள்ளன.
இதனால், சம்பந்தப்பட்ட முன்னாள் அமைச்சர்கள் மூவருக்கும் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டு உள்ளன.
அவர்களின் பயண திட்டம் குறித்து முன்கூட்டியே தகவல் சேகரித்து, அந்த இடங்களில் அசம்பாவித சம்பவங்கள் நடக்காமல் தடுக்கும் பணியில், போலீசார் ஈடுபட்டுள்ளனர்.
சி.வி.சண்முகம் உள்ளிட்ட மூவரும், போலீசாரின் தீவிர கண்காணிப்பில் கொண்டு வரப்பட்டு உள்ளனர்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
