தமிழ்நாட்டில் மொத்தம் உள்ள 234 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வரும் ஏப்ரல் மாதம் 23ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என்று இந்திய தலைமைத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பின்படி மார்ச் 30 ஆம் தேதி தொடங்கும் வேட்புமனு தாக்கல், ஏப்ரல் 6ஆம் தேதியுடன் நிறைவு பெறவுள்ளது. ஏப்ரல் 23ஆம் தேதி பதிவாகும் வாக்குகள் மே 4ஆம் தேதி எண்ணப்பட்டு அன்றைய தினம் முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.
இந்நிலையில் அதிமுக சார்பில் போட்டியிட உள்ள வேட்பாளர்ளுக்கான முதற்கட்ட பட்டியலை அக்கட்சியின் பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். அதன்படி, “எடப்பாடி தொகுதியில் எடப்பாடி பழனிசாமி, வேப்பனஹள்ளியில், கே.பி. முனுசாமி, திண்டுக்கல்லில் திண்டுக்கல் சீனிவாசன், நத்தம் தொகுதியில் நத்தம் இரா. விசுவநாதன் தொண்டாமுத்தூரில் வேலுமணி, குமாரபாளையத்தில் பி. தங்கமணி, ராயபுரத்தில் ஜெயக்குமார் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.
மைலம் தொகுதியில் சி.வி. சண்முகம், மதுரை மேற்கு தொகுதியில்செல்லூர் ராஜூ, பாலக்கோடு தொகுதியில் கே.பி. அன்பழகன், நன்னிலம் தொகுதியில் காமராஜ், வேதாரண்யம் தொகுதியில் ஓ.எஸ். மணியன், விராலிமலை தொகுதியில் சி. விஜயபாஸ்கர், கோவில்பட்டி தொகுதியில் கடம்பூர் ராஜூ, திருமங்கலம் தொகுதியில் ஆர்.பி. உதயகுமார் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.
சிவகாசி தொகுதியில் ராஜேந்திரபாலாஜி, மதுரவாயல் தொகுதியில் பா. பென்ஜமின், கலசபாக்கம் அக்ரி எஸ். எஸ். கிருஷ்ணமூர்த்தி, திருப்பரங்குன்றம் தொகுதியில் ராஜன் செல்லப்பா, பவானி தொகுதியில் கே.சி. கருப்பணன், ஜோலார்பேட்டை தொகுதியில் கே.சி. வீரமணி, கரூர் தொகுதியில் எம்.ஆர். விஜயபாஸ்கர் அரியலூர் தொகுதியில் தாமரை எஸ். ராஜேந்திரன்” என மொத்தம் 23 தொகுதிகளுக்கான வேட்பாளார்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
