ஆபரேஷன் ஹார்முஸ், கார்க் தீவு: தரைவழித் தாக்குதலுக்கு ஈரான் அருகில் வீரர்களைக் குவிக்கும் அமெரிக்கா

இஸ்ரேலும், அமெரிக்காவும் இணைந்து ஈரான் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. இத்தாக்குதலுக்கு ஈரானும் பதிலடி கொடுத்து வருகிறது. போரால் ஈரான் தனது எல்லைக்கு உட்பட்ட ஹார்முஸ் ஜலசந்தியை மூடிவிட்டது. இதையடுத்து ஹார்முஸ் ஜலசந்தியைத் திறக்காவிட்டால் ஈரானில் உள்ள மின் உற்பத்தி மையங்கள் மீது தாக்குதல் நடத்துவோம் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் ஈரானை மிரட்டி வருகிறார். அதோடு இதற்காக ட்ரம்ப், ஈரானுக்குக் காலக்கெடுவும் விதித்து வருகிறார். மற்றொரு புறம் ஈரான் குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் ஹார்முஸ் ஜலசந்தியைத் திறக்காத பட்சத்தில் ஈரான் மீது தரைவழித் தாக்குதல் நடத்தவும் அமெரிக்கா தயாராகி வருகிறது. இதற்காக ஈரானுக்கு அருகில் அமெரிக்கா தொடர்ந்து ராணுவத்தைக் குவித்து வருகிறது. இத்தரைவழித் தாக்குதலை எதிர்கொள்ள தயாராக இருப்பதாக ஈரானும் தெரிவித்துள்ளது. தற்போது வளைகுடா நாட்டில் இருந்து ஈரானிற்குள் சென்று தாக்குதல் நடத்துவது சரியாக இருக்காது என்று அமெரிக்கா கருதுகிறது. எனவே கடல் வழியாகச் சென்று இத்தாக்குதலில் ஈடுபட அமெரிக்கா தயாராகி வருகிறது. ராணுவம்இதற்காக யு.எஸ்.எஸ்.திரிபோலி என்ற போர்க்கப்பல் மூலம் 3500 அமெரிக்கக் கடற்படை வீரர்கள் வளைகுடாவிற்கு வந்து சேர்ந்துள்ளனர். அவர்கள் ஈரான் அருகில் முகாமிட்டுள்ளனர். தற்போது மொத்தம் 5,000 வீரர்கள் ஈரானைத் தாக்க தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளனர். மேலும் 10 ஆயிரம் வீரர்களை மத்திய கிழக்கு பகுதிக்கு அனுப்ப பெண்டகன் பரிசீலித்து வருகிறது.இத்தாக்குதல் தொடங்கப்பட்டால் சில வாரங்கள் நடக்கலாம் என்றும், அதிகபட்சம் 2 மாதங்கள் வரை மட்டுமே இருக்கும் என்றும் அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தரைவழித் தாக்குதல் நடத்துவது குறித்து டொனால்டு ட்ரம்ப் தொடர்ந்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். எந்நேரமும் இதற்கு ட்ரம்ப் ஒப்புதல் கொடுக்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதனால் ஈரானில் பதற்றம் மேலும் அதிகரித்து இருக்கிறது. ஈரானில் உள்கட்டமைப்புகள் அல்லது பொருளாதார மையங்கள் குறிவைக்கப்பட்டால், அதற்குப் பதிலடி கடுமையாக இருக்கும் என்றும், நாங்களாகத் தாக்கமாட்டோம் என்றும் ஈரானிய அதிபர் மசூத் பெசெஷ்கியான் எச்சரித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில், “ஈரான் முன்கூட்டிய தாக்குதல்களை மேற்கொள்வதில்லை என்று நாங்கள் பலமுறை கூறியுள்ளோம்; ஆனால், எங்களது உள்கட்டமைப்புகள் அல்லது பொருளாதார மையங்கள் குறிவைக்கப்பட்டால், நாங்கள் கடுமையாகப் பதிலடி கொடுப்போம்” என்று குறிப்பிட்டுள்ளார். ஆனால் ஈரானில் அதிக எண்ணெய் வளம் கொண்ட கார்க் தீவை முதலில் பிடித்துக்கொண்டு அதன் பிறகு ஈரானுடன் பேச்சுவார்த்தை நடத்துவது குறித்து அமெரிக்கா பரிசீலித்து வருகிறது. இத்தரைவழித் தாக்குதல் மூலம் ஈரானைப் பிடிப்பது தங்களது நோக்கம் இல்லை என்றும், தாக்குதல் நடவடிக்கைகள் மூலம் ஈரானின் ராணுவத் கட்டமைப்புகளை அழிப்பதே பிரதான இலக்கு என்றும் அமெரிக்க வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. ஈரானில் உள்ள ஏவுகணை ஏவுதளங்கள், வான் பாதுகாப்பு அமைப்புகள் மற்றும் கப்பல் போக்குவரத்துப் பாதைகளுக்கு அச்சுறுத்தலாக உள்ள கடலோரக் கட்டமைப்புகளும் இத்தாக்குதலில் குறிவைக்கப்பட இருக்கின்றன. இத்தாக்குதலுக்கு நான்கு முக்கிய அம்சங்கள் பரிசீலிக்கப்பட்டு வருகின்றன. கார்க் தீவைக் கைப்பற்றுவது அல்லது முற்றுகையிடுவது, ஹார்முஸ் ஜலசந்தியைக் கட்டுப்படுத்த ஈரானுக்கு உதவும் லாராக் தீவைத் தாக்குவது, மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் உரிமை கோரும் அருகிலுள்ள தீவுகளுடன் அபு மூசாவையும் கைப்பற்றுவது ஆகியவை அடங்கும்.மேலும் அப்பகுதியில் ஈரானிய எண்ணெயை ஏற்றுமதி செய்யும் கப்பல்களை இடைமறிப்பது இத்தாக்குதலின் நோக்கமாகும். முழு அளவில் அமெரிக்கப் படைகள் தரைவழித்தாக்குதலுக்குத் தயாராகி வந்தாலும் எப்போது இத்தாக்குதல் தொடங்கும் என்பது மர்மமாக இருக்கிறது. பேச்சுவார்த்தை என்று ஈரானின் கவனத்தை திசை திருப்பிவிட்டு பிப்ரவரி 28ம் தேதி தாக்குதல் நடத்தியது போன்று இப்போதும் தாக்குதல் நடத்த அமெரிக்கா சத்திட்டம் தீட்டியது. ஆனால் இப்போது அதன் வலையில் ஈரான் விழவில்லை.

Source link