அமெரிக்க – இஸ்ரேல் படைகள் ஈரான் மீது தாக்குதல் நடத்தி வருகின்றன. உலகின் மிகப்பெரிய இயற்கை எரிவாயு இருப்பைக் கொண்ட ஈரானின் South Pars வயல் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது.
இந்தத் தாக்குதலுக்குப் பதிலடியாக வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்கச் சொத்துக்கள் மற்றும் எரிசக்தி நிலையங்களை ஈரான் இலக்கு வைத்து தாக்குதல் நடத்தி வருகிறது.
அதன் ஒருபகுதியாக கத்தாரின் மிகப்பெரிய திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயு (LNG) உற்பத்தி மையமான Ras Laffan மீது ஈரான் ஏவுகணைத் தாக்குதல் நடத்தியிருக்கிறது. அதனால், அதன் உற்பத்தி முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளது.
இது தொடர்பாக வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “பிராந்தியத்தில் பதற்றத்தைக் குறைக்கவும், மோதல்களைத் தவிர்க்கவும் தூதரக ரீதியிலான பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ள வேண்டும் என்று இந்தியா தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.
பொதுமக்கள் பயன்படுத்தும் உள்கட்டமைப்புகள் மற்றும் எரிசக்தி நிலையங்களை இலக்கு வைப்பதை இந்தியா வன்மையாகக் கண்டிக்கிறது” எனக் குறிப்பிட்டிருக்கிறது.
இந்த விவகாரம் குறித்த கேள்விக்குப் பதிலளித்த வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால், “மத்திய கிழக்கு நாடுகளில் நடக்கும் போர் தொடர்பாக பிரதமர் மோடி ஓமன் சுல்தான், பிரான்ஸ் அதிபர், மலேசியப் பிரதமர் மற்றும் பின்லாந்து அதிபர் ஆகியோருடன் தொலைபேசி வாயிலாகப் பேசி ஆலோசித்து வருகிறார்.
அமெரிக்க உளவுத்துறைத் தலைவர் துளசி கப்பார்ட், பாகிஸ்தானை அணுசக்தி அச்சுறுத்தல் மிகுந்த நாடாக அறிவித்திருக்கிறார்.

பாகிஸ்தானுக்கு ரகசியமான முறையில் அணுசக்தி நடவடிக்கைகளில் ஈடுபட்ட நீண்ட கால வரலாறு உண்டு. இத்தகைய அறிக்கைகள் அவர்களின் நம்பகத்தன்மையை மீண்டும் ஒருமுறை உலகிற்கு அம்பலப்படுத்தியுள்ளது.
ஆப்கானிஸ்தான் மீது பாகிஸ்தான் நடத்திய வான்வழித் தாக்குதலில் 400 பேர் கொல்லப்பட்டிருக்கின்றனர். இந்தத் தாக்குலுக்கு இந்தியா வன்மையான கண்டனத்தை தெரிவித்துகொள்கிறது” என்றார்.
