ஆரத்தியில் கரைகிறது பணம்; பெண்கள் போட்டா போட்டி

தமிழகத்தில், தேர்தல் பிரசாரம் களைகட்ட துவங்கி உள்ளது. அனைத்து கட்சி வேட்பாளர்களும், வீதி வீதியாக சென்று ஓட்டு கேட்க துவங்கி விட்டனர். முன்பெல்லாம், ஓட்டு கேட்டு வரும் வேட்பாளர்களுக்கு ஆரத்தி எடுக்க பெண்கள் தயங்குவர். எனவே, கட்சி நிர்வாகிகள் வீடுகளில் மட்டும், அவர்கள் வீட்டு பெண்கள் ஆரத்தி எடுப்பர்.

தற்போது, வேட்பாளர்கள் தரப்பில், ஆரத்திக்கு பணம் கொடுப்பதால், அனைத்து வீதிகளிலும், எந்த கட்சி வேட்பாளர் வந்தாலும், ஆரத்தி எடுக்க பெண்கள் வரிசைகட்டி நிற்பதைக் காண முடிகிறது.

ஒவ்வொரு பெண்ணுக்கும், வேட்பாளர்கள் தரப்பில், 100 முதல் 500 ரூபாய் வரை வழங்கப்படுகிறது. இதற்கான ஏற்பாடுகளை செய்தவருக்கு, பொதுவெளியில் சால்வை அணிவிக்கப்படுகிறது.

முன்பு, ஆரத்தி எடுக்கும் பெண்களிடம், அப்போதே பணம் வழங்கப்படும். தற்போது தேர்தல் கமிஷன் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாலும், அனைவரும் மொபைல் போனில், படம், வீடியோ எடுப்பதாலும், ஆரத்தி எடுப்போருக்கு, அப்போதே பணம் வழங்கப்படுவதில்லை.

வேட்பாளர்கள் அப்பகுதியில் பிரசாரத்தை முடித்து சென்ற பின், பொறுப்பாளர்கள் வழியே, சம்பந்தப்பட்ட பெண்களுக்கு, பணம் பட்டுவாடா செய்யப்படுகிறது.

நுாறு ரூபாய் கொடுத்தால், ஆரத்திக்கான பொருட்கள் விலை உயர்ந்து விட்டது எனக்கூறி, பெண்கள் கூடுதல் பணம் கேட்கின்றனர். சில பகுதிகளில், கட்சியினர் ஆரத்தி தட்டு வாங்கி கொடுத்து, அதை சம்பந்தப்பட்ட பெண்களை எடுத்துக் கொள்ளும்படி கூறுகின்றனர்.

இதன் காரணமாக, பிரசாரத்திற்கு செல்லும் ஒவ்வொரு வேட்பாளரும், தினம் ஒரு குறிப்பிட்ட தொகையை, ஆரத்திக்கு மட்டும் செலவிட வேண்டியுள்ளது.

Source link