சென்னை: ‘ஆர்டர்லி முறையை ஒழிக்கும் கொள்கையை அமல்படுத்தவில்லை எனில், மாவட்ட கலெக்டர்கள் மட்டுமின்றி, சம்பந்தப்பட்ட காவல்துறை அதிகாரிகளுக்கு எதிராகவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
போலீசார், போலீஸ் அதிகாரிகளின் வீட்டு வேலைகளை செய்யும் முறை, ஆர்டர்லி முறை என அழைக்கப்படுகிறது. இந்த நடைமுறையை முற்றிலுமாக ஒழிக்க வேண்டும் என, 2022ல் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
கடந்த முறை இது தொடர்பான வழக்கு விசாரணைக்கு வந்தபோது, ‘காவல்துறை உயர் அதிகாரிகள் வீடுகளில், ஆர்டர்லிகள் பயன்படுத்தப்படுகின்றனரா என்பதை கண்காணிக்க, மாவட்ட அளவில், கலெக்டர்கள் தலைமையில் குழு அமைக்கப்பட்டு உள்ளது’ என, தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்த வழக்கு, நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம், கே.சுரேந்தர் அடங்கிய அமர்வு முன், நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது அட்வகேட் ஜெனரல் பி.எஸ்.ராமன் ஆஜராகி, ”அரசாணையின் அடிப்படையில், ஆர்டர்லி முறை மாநிலம் முழுதும் முழுமையாக ஒழிக்கப்படுவதை உறுதி செய்யும் வகையில் அறிவுறுத்தல்கள், காவல்துறை அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டு விட்டன,” என்றார்.
இதையடுத்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:
ஆர்டர்லி நடைமுறை தொடர்பாக வரும் புகார்கள் மீது, அரசின் அறிவுறுத்தல்படி விரைவாக விசாரணை நடத்தி, மாவட்ட கலெக்டர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இந்த விவகாரத்தில், உயர் அதிகாரிகள் கூட்டு சேர்ந்து செயல்பட்டால் நடவடிக்கை எடுக்கப்படும். பிரிட்டிஷ் ஆட்சி நடைமுறை, நீண்ட காலத்திற்கு முன்பே ஒழிக்கப்பட்டும், நடைமுறையில் தொடர்கிறது.
எனவே, ஆர்டர்லி முறையை ஒழிக்கும், அரசின் கொள்கையை அமல்படுத்தவில்லை என்றால், கலெக்டர்கள் மட்டுமில்லாமல், சம்பந்தப்பட்ட காவல்துறை அதிகாரிகளுக்கு எதிராகவும், பணி விதிகளின் கீழ் நடவடிக்கை எடுக்கலாம்.
இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
