புதுடில்லி: ”சாம்சன் ‘சரவெடியாக’ விளாசினால், முதல் 6 ஓவரிலேயே வெற்றியை உறுதி செய்துவிடுவார்,” என பயிற்சியாளர் காம்பிர் தெரிவித்தார்.
இந்திய அணியின் விக்கெட்கீப்பர்-பேட்டர் சஞ்சு சாம்சன், 31. நியூசிலாந்துக்கு எதிரான ‘டி-20’ தொடரில் (10, 6, 0, 24 , 6) தடுமாறினார். இதனால், ‘டி-20’ உலக கோப்பை தொடருக்கான இந்திய ‘லெவனில்’ வாய்ப்பு அளிக்கப்படவில்லை. பின் ஜிம்பாப்வேக்கு எதிரான போட்டியில் துவக்க வீரராக சேர்க்கப்பட்டார். 15 பந்தில் 24 ரன் விளாசினார். அடுத்து, வெஸ்ட் இண்டீஸ் (97* ரன், ‘சூப்பர்-8’ சுற்று), இங்கிலாந்துக்கு (89, அரையிறுதி) எதிராக அசத்தினார். பைனலில் சாம்சன்-அபிஷேக் சேர்ந்து நியூசிலாந்து பந்துவீச்சை சிதறடிக்க, ‘பவர் பிளே’யில் (முதல் 6 ஓவர்) இந்தியா 92/0 ரன் எட்டியது. பைனலில் 46 பந்தில் 89 ரன் விளாசிய சாம்சன், தொடர்ந்து மூன்று அரைசதம் கடந்து, இந்தியா மீண்டும் கோப்பை வெல்ல கைகொடுத்தார். 5 போட்டியில் 321 ரன் (ஸ்டிரைக் ரேட் 199.37) குவித்த இவர், தொடர் நாயகன் விருது வென்றார்.
இது பற்றி இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் காம்பிர் கூறியது: சஞ்சு சாம்சன் திறமை பற்றி தெரியும். இவரது அதிரடி ஆட்டம் குறித்து எவ்வித சந்தேகமும் எழவில்லை. இவர் விளாச துவங்கினால், முதல் 6 ஓவரிலேயே வெற்றியை உறுதி செய்வார். உலக கோப்பை தொடரின் போது, நாங்கள் ஒன்றாக ‘ஜிம்’மில் உடற்பயிற்சி செய்தோம். அப்போது, ‘ஜிம்பாப்வேக்கு எதிராக விளையாட போகிறாய்…’ என்றேன். அதற்கு அவர் ‘வாய்ப்பு வரட்டும் பார்க்கலாம்’ என சாதாரணமாக பதில் அளித்தார். எங்களுக்கு இடையிலான உரையாடல் சகஜமாக இருந்தது. ஒரு தலைமை பயிற்சியாளர், வீரர் என்ற உறவில் அமையவில்லை. வலை பயிற்சியின் போது கூட இப்படி தான் பேசிக் கொள்வோம்.
அதிரடி ஆட்டம்: ‘டாப்-ஆர்டரில்’ அபிஷேக் சர்மா, இஷான் கிஷான், திலக் வர்மா என மூன்று இடது கை பேட்டர்கள் இருந்ததால் தான், வலது கை பேட்டரான சாம்சனுக்கு வாய்ப்பு அளித்தோம் என கூறுவது சரியல்ல. இது, ‘ஆப்-ஸ்பின்னரை’ சமாளிக்கும் யுக்தியும் அல்ல. துவக்கத்தில் அதிவிரைவாக ரன் சேர்க்க வேண்டும் என்பதே அணியின் இலக்கு. இதற்கு வலு சேர்க்கும்விதமாக சாம்சனை சேர்த்தோம். முதல் 6 ஓவரில் ஆக்ரோஷமாக விளையாட விரும்பினோம். இந்த பணியை சாம்சன் சிறப்பாக செய்தார்.
வீரர்கள் மீது நம்பிக்கை: அபிஷேக் சர்மா 3 முறை ‘டக்’ அவுட்டாகி தவித்தார். அவரிடம் எனது அனுபவத்தை பகிர்ந்து கொண்டேன். 2014ல் நடந்த பிரிமியர் தொடரில் நானும் நான்கு முறை ‘டக்’ அவுட்டானேன். ‘அனைவரும் உனது ஸ்கோரை பார்த்து, ‘பார்ம்’ இல்லை என விமர்சிப்பர். உண்மையில் நீ ‘பார்ம்’ இல்லாமல் தவிக்கவில்லை; ரன் தான் எடுக்கவில்லை’ என்றேன். களத்தில் 20-30 பந்துகளை சந்தித்துவிட்டு தான் ‘பார்ம்’ பற்றி முடிவு செய்ய வேண்டும். அபிஷேக்கை பொறுத்தவரை 20 பந்துகளை கூட சந்திக்கவில்லை. அடுத்த போட்டியில் இன்னும் ஆக்ரோஷமாக விளையாடும்படி ஆலோசனை கூறினேன். இவரது திறமையை ஒருபோதும் சந்தேகிக்கவில்லை. ‘டி-20’ உலக கோப்பை தொடரில், நாட்டுக்காக தேர்வு செய்யப்பட்ட ஒவ்வொரு வீரர் மீதும் நம்பிக்கை வைத்திருந்தோம். இதற்கு ஏற்ப பைனலில் அரைசதம் விளாசிய அபிஷேக், சாம்பியன் பட்டம் வெல்ல கைகொடுத்தார்.
இவ்வாறு காம்பிர் கூறினார்.
கனவு நனவானது
சாம்சன் கூறுகையில்,”உலக கோப்பை தொடருக்கான இந்திய ‘லெவனில்’ என்னை சேர்க்காத போது நெஞ்சம் தகர்ந்தது. என் மீது அணி நிர்வாகம் நம்பிக்கை வைக்கும் என காத்திருந்தேன். இதற்கேற்ப ஜிம்பாப்வேக்கு எதிராக வாய்ப்பு அளித்தனர். எஞ்சிய நான்கு போட்டியில் கட்டாயம் வென்றால், உலக கோப்பை கைப்பற்றலாம் என்ற நிலை ஏற்பட்டது. இதை உணர்ந்து ஆக்ரோஷமாக விளையாடினேன். இறுதியில் உலக கோப்பை கனவு நனவானது. நாட்டுக்காக இன்னும் பல கோப்பைகள் வென்று கொடுப்பேன்,”என்றார்.
‘பழங்கஞ்சி’ கிடைக்குமா
‘டி-20’ உலக கோப்பை ‘சூப்பர்-8’ போட்டியில் 97* ரன் விளாசிய ‘சேட்டன்’ சாம்சன், வெற்றிநாயகனாக ஜொலித்தார். இம்மகிழ்ச்சியில் கேரள உணவு வகைகளை சாப்பிட விருப்பம் தெரிவித்துள்ளார்.
இது பற்றி சாம்சனின் தனிப்பட்ட சமையல் நிபுணர் சுரேஷ் கூறுகையில்,”மார்ச் 2ல், இரவு 7:00 மணிக்கு சாம்சனின் மானேஜர் இக்லாஸ் அழைத்தார். 3 மாதம் உணவு கட்டுப்பாட்டில் இருந்த சாம்சன், இன்று இரவு பழங்கஞ்சி (பழைய சோறு), மீன், கப்பக்கிழங்கு பொரியல், சம்மந்தி (துவையல்), மத்தி மீன் வறுவல், குழம்பு சாப்பிட விரும்புகிறார். ஏற்பாடு செய்ய முடியுமா…’ என கேட்டார். ‘மும்பையில்…இரவு 7 மணிக்கு பழங்கஞ்சிக்கு வாய்ப்பு இல்லை’ என்றேன். பின் நண்பர் ஒருவர் உணவகத்தின் மூலம் சூடான கஞ்சி, சம்மந்தி, பப்படம் (அப்பளம்) உட்பட அனைத்து உணவையும் ஏற்பாடு செய்து கொடுத்தேன்,”என்றார்.
