நமது டில்லி நிருபர்
புதுடில்லி: டில்லி பள்ளிகள் மற்றும் பார்லிமென்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுவிக்கப்பட்ட மூன்று நாட்கள் ஆன நிலையில், இன்று மேலும், மூன்று பள்ளிகளுக்கு, இ – மெயில் வாயிலாக வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது.
மத்திய டில்லியில் உள்ள பி.டி.தமிழ் பள்ளி உள்ளிட்ட மூன்று பள்ளிகள் இன்று காலையில் துவங்கியதும், பள்ளிகளுக்கு இ – மெயில் மிரட்டல் விடுக்கப்பட்டிருந்தது. அதை அறிந்து, தீயணைப்பு துறையினருக்கு, பள்ளி நிர்வாகம் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டது.
அதையடுத்து, அந்த பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படாமல், தொடர்ந்து இயங்கின. வழக்கமாக, இதுபோன்ற புகார்கள் வந்தால், அந்த பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படும். இந்த முறை, விடுமுறை அளிக்கப்படாமல், வெறும் சோதனை மட்டும் நடத்தப்பட்டது.
சோதனையின் முடிவில், அந்த மிரட்டல் வதந்தி என்பது தெரிய வந்தது. டில்லியில் உள்ள பள்ளிகளுக்கு அடிக்கடி வெடிகுண்டு மிரட்டல் விடுப்பது வழக்கமாகிவிட்டது. காலையில் பள்ளி செயல்பட துவங்கியதும் மர்மநபர்கள் வெடிகுண்டு மிரட்டல் விடுப்பது பெற்றோர்கள் மத்தியில் பரபரப்பை கிளப்பி வருகிறது.
