இதுவரை இழந்தது ரூ.50 லட்சம் கோடி போரால் பந்தாடப்படும் முதலீட்டாளர்கள் டிரம்ப் அறிவிப்பு இன்றாவது ஆறுதல் தருமா?

ஈரானின் மின் உற்பத்தி நிலையங்கள் மற்றும் எரிசக்தி கட்டமைப்புகள் மீதான ராணுவ தாக்குதல்களை, அடுத்த 5 நாட்களுக்கு ஒத்திவைக்க பாதுகாப்பு துறைக்கு அமெரிக்க அதிபர் ட்ரம்ப் உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து தனது ‘எக்ஸ்’ தளத்திலும் அவர் பதிவிட்டுள்ளார். இதனால், கச்சா எண்ணெய், டாலர் மதிப்பு, தங்கம் மற்றும் வெள்ளி ஆகியவற்றில் உடனடி தாக்கம் இருக்கும் எனவும், இன்றைய பங்குச் சந்தையில் இதன் எதிரொலி இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இருப்பினும், நேற்று இந்திய பங்குச் சந்தைகள் வீழ்ச்சியடைந்தன. வர்த்தகம் துவங்கிய முதல் ஒரு மணி நேரத்திலேயே முதலீட்டாளர்களின் சொத்துமதிப்பு கிட்டத்தட்ட 14 லட்சம் கோடி ரூபாய் சரிந்தது. போர் ஆரம்பித்த பிப்.,28ம் தேதியில் இருந்து இன்று வரை, கிட்டத்தட்ட 50 லட்சம் கோடி ரூபாய் இழப்பு இந்திய முதலீட்டாளர்களுக்கு ஏற்பட்டுள்ளது.

நேற்றைய வர்த்தகத்தின் இடையே, சென்செக்ஸ் மற்றும் நிப்டி குறியீடுகள் 3 சதவீதம் வரை சரிவை சந்தித்தன. வர்த்தக முடிவில் சென்செக்ஸ், 1,836 புள்ளிகள் சரிந்து 72,696 என்ற நிலையிலும், நிப்டி 602 புள்ளிகள் சரிந்து 22,512 என்ற நிலையிலும் நிறைவடைந்தன.

போர் ஆரம்பித்த நாளில் இருந்து, வெறும் 24 வர்த்தக நாட்களில் இரண்டு குறியீடுகளும் கிட்டத்தட்ட 10.5 சதவீதம் சரிவை சந்தித்துள்ளன.

நேற்றைய சரிவுக்கான முக்கிய காரணங்கள்

 ஈரானின் மின்சார கட்டமைப்பை 48 மணி நேரத்துக்குள் தாக்குவோம் என அமெரிக்க அதிபர் டிரம்ப் விடுத்த எச்சரிக்கை

 அமெரிக்கா தாக்கினால், வளைகுடா நாடுகளின் எரிசக்தி மற்றும் நீர் விநியோக கட்டமைப்புகளை தகர்ப்போம் என ஈரான் விடுத்த பதில் எச்சரிக்கை

 உலகளாவிய எரிசக்தி வினியோகம் பாதிக்கப்படும் என்ற அச்சத்தால், கச்சா எண்ணெய் விலை உயர்ந்தது; இது, இந்தியாவின் இறக்குமதி செலவு அதிகரித்து பணவீக்கத்தை உயர்த்தும் எனும் அச்சம்

 ஜப்பானின் நிக்கி (3.5%), ஹாங்காங்கின் ஹாங்செங் (3.5%) மற்றும் தென் கொரியாவின் கோஸ்பி (6.5%) சந்தைகள் சரிந்தது

 அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 94.03 என்ற நிலைக்கு சரிந்தது

 வெளிநாட்டு முதலீட்டாளர்கள் தொடர்ந்து பங்குகளை விற்று வெளியேறுவது

 உலகளாவிய கடன் பத்திரங்களின் வருவாய் அதிகரிப்பு.

நிப்டி 50: அதிக சரிவு கண்டவை (23.03.26 நிலவரப்படி) டைட்டன் 3,842.60 -6.43 ஸ்ரீராம் பைனான்ஸ் 880.80 -6.16 ட்ரென்ட் 3,347.00 -5.97 ஜியோ பைனான்ஸ் 225.90 -5.60 ஹெச்.டி.எப்.சி., லைப் 590.10 -5.38

ஹெச்.டி.எப்.சி., வங்கி 4% சரிவு ‘ஹெச் .டி.எப்.சி.,’ வங்கி பங்கு விலை மேலும் 4 சதவீதத்துக்கு மேல் சரிந்து, ஓராண்டில் இல்லாத குறைந்தபட்ச விலையான 748 ரூபாயுடன் வர்த்தகத்தை நிறைவு செய்தது. தலைவர் அதானு சக்ரவர்த்தி விலகியது, முதலீட்டாளர்கள் மத்தியில் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது என ஹெச்.எஸ்.பி.சி., தெரிவித்ததோடு, வங்கியின் இலக்கு விலையை 1,070 ரூபாயிலிருந்து 990 ரூபாயாக குறைத்துள்ளது.

வங்கி பங்குகள் வீழ்ச்சி அமெரிக்கா, இஸ்ரேல் – ஈரான் போர் பதற்றத்தால் ஒட்டுமொத்த சந்தையும் சரிந்த நிலையில், வங்கி பங்குகள் மட்டும் 3 சதவீதத்துக்கும் மேல் வீழ்ந்து, கடந்த 11 மாதங்களில் இல்லாத குறைந்தபட்ச நிலையை எட்டியுள்ளன. ‘பேங்க் நிப்டி’ ஒரே நாளில் 1,500 புள்ளிகளுக்கு மேல் சரிந்து 51,791 என்ற நிலையை தொட்டது. ஏப்ரல் 2025க்கு பிறகு முதன்முறையாக இது 52,000 புள்ளிகளுக்கு கீழ் சென்றுள்ளது. ‘யூனியன் மற்றும் பஞ்சாப் நேஷனல் வங்கி’ பங்குகள் 5 சதவீதம் வரையும், ‘எஸ்.பி.ஐ., ஹெச்.டி.எப்.சி., மற்றும் ஐ.சி.ஐ.சி.ஐ., ஆக்சிஸ், எஸ் பேங்க், கனரா, ஐ.டி.எப்.சி., பேங்க் ஆப் பரோடா’ உள்ளிட்ட பல வங்கி பங்குகளின் விலை 2 முதல் 4 சதவீதம் வரை சரிவை சந்தித்தன.

Source link