புதுடெல்லி: இந்தியத் தேர்தல்கள் உலகுக்கே ஓர் உண்மையான ஜனநாயகத் திருவிழா என்று அசாம், கேரளா, புதுச்சேரி மாநில தேர்தல்களை நேரில் பார்வையிட்ட சர்வதேச பிரதிநிதிகள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கை: தேர்தல் ஆணையத்தின் சர்வதேச தேர்தல் பார்வையாளர்கள் திட்டமான ஐஇவிபி-2026-ன் ஒரு பகுதியாக, 22 நாடுகளைச் சேர்ந்த 38 சர்வதேசப் பிரதிநிதிகள் இந்தியாவின் தேர்தல் செயல்முறையின் அளவு, துல்லியம், வேகம் ஆகியவற்றை நேரடியாகக் கண்டு பாராட்டினர். அசாம், கேரளம், புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் நடைபெற்ற சட்டப் பேரவைத் தேர்தல்கள் உலகளாவிய கவனத்தை ஈர்த்துள்ளன.
இந்த அனுபவத்தை “ஜனநாயகத்தின் உண்மையான திருவிழா” என்று வர்ணித்த பிரதிநிதிகள், இந்தியாவில் அசாம், கேரளம், புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்ல்களில் சாதனை அளவிலான வாக்காளர் பங்கேற்பு, நுணுக்கமான திட்டமிடல், தடையற்ற தேர்தல் செயலாக்கம் ஆகியவற்றைப் பாராட்டினர்.
“இந்தியத் தேர்தல்கள், உலகுக்கே ஓர் உண்மையான ஜனநாயகத் திருவிழா. வாக்களிப்பதில் மக்களின் ஆர்வம் என்னை மிகவும் நெகிழ வைக்கிறது. இந்தச் செயல்முறையிலிருந்து நாங்கள் கற்றுக்கொள்கிறோம். இது ஒரு மாபெரும் செயல்முறை. இது மிகச் சரியாகச் செய்யப்பட்டுள்ளது” என்று குரோஷியா நாட்டைச் சேர்ந்த சர்வதேசப் பார்வையாளரான பிரானிமிர் ஃபர்காஸ் கூறினார்.
