இந்தியா-சீனா மோதல்: தாமஸ்-உபர் கோப்பை பாட்மின்டனில்

புதுடில்லி: தாமஸ், உபர் கோப்பை பாட்மின்டனில் இந்தியா, சீனா அணிகள் மோதுகின்றன.

டென்மார்க்கில், தாமஸ், உபர் கோப்பை பாட்மின்டன் (ஏப். 24 – மே 3) தொடர் நடக்கவுள்ளது. இதில் பங்கேற்கும் அணிகளுக்கான ‘குரூப்’ வெளியானது.

ஆண்களுக்கான தாமஸ் கோப்பை 34வது சீசனில், மொத்தம் 16 அணிகள் 4 பிரிவுகளாக லீக் சுற்றில் விளையாடுகின்றன. ஒவ்வொரு பிரிவிலும் முதலிரண்டு இடம் பிடிக்கும் அணிகள் காலிறுதிக்கு தகுதி பெறும். கடந்த 2022ல் முதன்முறையாக தாமஸ் கோப்பை வென்ற இந்திய அணி, ‘ஏ’ பிரிவில் ‘நடப்பு சாம்பியன்’ சீனா, கனடா, ஆஸ்திரேலியா அணிகளுடன் இடம் பெற்றுள்ளது. கடந்த முறை (2024) காலிறுதியில் சீனாவிடம் கண்ட தோல்விக்கு இம்முறை இந்திய அணி பதிலடி கொடுக்க முயற்சிக்கலாம்.

பெண்களுக்கான உபர் கோப்பை 31வது சீசனில், 16 அணிகள் 4 பிரிவுகளாக லீக் சுற்றில் பங்கேற்கின்றன. இரண்டு முறை (2014, 2016) வெண்கலம் கைப்பற்றிய இந்திய அணி, ‘ஏ’ பிரிவில் ‘நடப்பு சாம்பியன்’ சீனா, டென்மார்க், உக்ரைன் அணிகளுடன் உள்ளது. கடந்த முறை (2024) காலிறுதியில் இந்திய பெண்கள் அணி, ஜப்பானிடம் தோல்வியடைந்தது.

இத்தொடருக்கு இந்திய அணிகள், உலக தரவரிசை அடிப்படையில் தகுதி பெற்றன.

Source link