புதுடில்லி: ஆசிய கோப்பை கால்பந்தில் (20 வயது) இந்திய பெண்கள் அணி முதல் போட்டியில் ஜப்பானை எதிர்கொள்கிறது.
தாய்லாந்தில் பெண்களுக்கான (20 வயதுக்கு உட்பட்ட) ஆசிய கோப்பை கால்பந்து தொடரின் 12வது சீசன், வரும் ஏப். 1-18ல் நடக்கவுள்ளது. மொத்தம் 12 அணிகள் மூன்று பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரு இடம் பெறும் 6 அணிகள், 3வது இடம் பிடித்த சிறந்த 2 அணிகள் சேர்த்து, 8 அணிகள் காலிறுதிக்கு முன்னேறும்.
20 ஆண்டுகளுக்கு பின் இத்தொடரில் பங்கேற்க தகுதி பெற்றது இந்தியா. இம்முறை ‘குரூப் ஆப் டெத்’ என்றழைக்கப்படும் ‘சி’ பிரிவில், 6 முறை கோப்பை வென்ற, ஆசியாவின் ‘நம்பர்-1’ அணி, நடப்பு சாம்பியன் ஜப்பான், வலிமையான ஆஸ்திரேலியா, சீன தைபே அணிகள் உள்ளன.
இதற்கான அட்டவணை நேற்று வெளியானது. இதன் படி இந்திய அணி தனது முதல் போட்டியில் ஜப்பானை ஏப்., 2ல் எதிர்கொள்கிறது. அடுத்து ஏப்., 5ல் ஆஸ்திரேலியா, ஏப்., 8ல் சீன தைபேவுடன் மோதுகிறது.
