வாஷிங்டன்:இந்தியாவில் இருந்து சோலார் பேனல் இறக்குமதி செய்வதற்கு அதிபர் டிரம்ப் 126 சதவீதம் வரி விதித்துள்ளார்.
கடந்தாண்டு ஜனவரியில் இரண்டாவது முறையாக, அமெரிக்க அதிபராக பதவியேற்ற டிரம்ப், வர்த்தக பற்றாக்குறையை காரணமாக கூறி, இந்தியா உட்பட சர்வதேச நாடுகளுக்கு பரஸ்பர வரி விதிப்பு என்ற பெயரில் அதீத வரிகளை விதித்து வருகிறார்.
தற்போது, இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் சோலார் பேனல்களுக்கு அமெரிக்கா 126% வரி விதித்துள்ளது. இந்தியா தனது உற்பத்தி துறைக்கு நியாயமற்ற முறையில் மானியம் வழங்கியதாக அமெரிக்க வர்த்தகத் துறை புகாரின் பேரில், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
2025ம் ஆண்டின் முதல்பாதியில் அமெரிக்காவின் சூரிய சக்தி இறக்குமதியில் இந்தியா, இந்தோனேசியா, லாவோஸ் 57% பங்களித்துள்ளன. 2022ம் ஆண்டில் 83.86 மில்லியன் அமெரிக்க டாலர் என்ற அளவில் இந்திய சோலார் பொருட்கள் அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டன.
இது, 2024ம் ஆண்டில் 792.6 மில்லியன் அமெரிக்க டாலர்களாக, அதாவது ஒன்பது மடங்கு அதிகரித்துள்ளது. இந்த சூழலில் அமெரிக்க வரி விதித்து இருப்பது, இந்திய உற்பத்தி துறையினர் மத்தியில் கவலையை ஏற்படுத்தி உள்ளது.
அமெரிக்கா வரி விதித்த நிலையில், வாரீ எனர்ஜிஸ் நிறுவனத்தின் பங்குகள், பிரீமியர் எனர்ஜிஸ் நிறுவனத்தின் பங்குகள் சரிவடைந்துள்ளன. இந்த வரி விதிப்பு உற்பத்தியாளர்கள் மற்றும் நுகர்வோர் இருவருக்கும் செலவுகளை அதிகரிக்கக்கூடும் என வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
