இந்திய பொருளாதார வளர்ச்சி கணிப்பை உயர்த்தியது உலக வங்கி: 6.60 சதவீதம் வளரும் என அறிக்கை

புதுடில்லி: நடப்பு நிதியாண்டுக்கான இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி கணிப்பை, உலக வங்கி, 6.60 சதவீதமாக சற்றே உயர்த்தி அறிவித்துள்ளது. முன்னதாக, கடந்த ஜனவரி மாதம் வெளியிட்டிருந்த அறிக்கையில், ஜி.டி.பி., வளர்ச்சி 6.50 சதவீதமாக இருக்கும் என தெரிவித்திருந்தது.

ஜி.எஸ்.டி., குறைப்பால், நடப்பு நிதியாண்டின் முதல் சில மாதங்கள் வரை நுகர்வோர் தேவை வலுவாக இருக்கும் என்றாலும், மேற்காசிய போரின் தாக்கம் வளர்ச்சியை பாதிக்கக்கூடும் என, உலக வங்கி தெரிவித்துள்ளது.

மேலும் தெரிவித்துள்ளதாவது:

வலுவான உள்நாட்டு தேவை மற்றும் சிறப்பான ஏற்றுமதி காரணமாக, கடந்த நிதியாண்டில், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 7.60 சதவீதமாக இருக்கும் என கணிக்கப்படுகிறது. மேற்காசிய போர் ஏற்படுத்தும் பாதிப்புகள் காரணமாக, நடப்பு நிதியாண்டில் வளர்ச்சி 6.60 சதவீதமாக குறையும் என எதிர்ப்பார்க் கப்படுகிறது. ஜி.எஸ்.டி ., குறைப்பின் தாக்கம், நடப்பு நிதியாண்டின் முதல் பாதியில் நுகர்வோர் தேவையை வலுவாக வைத்திருக்கும்; இருப்பினும், சர்வதேச சந்தையில் எரிபொருள் விலை உயர்ந்துள்ளது, விலைவாசி உயர்வுக்கு வழிவகுத்து, குடும்பங்களின் செலவு செய்யும் திறனை குறைக்கும்.

சமையல் எரிவாயு மற்றும் உரங்களுக்கு மானியம் வழங்க அதிக நிதி ஒதுக்க வேண்டும் என்பதால், அரசின் நுகர்வு செலவு குறைய வா ய்ப்புள்ளது.

சர்வதேச அளவில் அதிகரித்து காணப்படும் நிச்சயமற்ற தன்மை மற்றும் மூலப்பொருட்களின் விலை உயர்வு காரணமாக, முதலீட்டு வளர்ச்சியும் சற்றே குறையலாம்.

இவ்வாறு தெரிவித்து உள்ளது.

2026 – 27ல் ஜி.டி.பி., வளர்ச்சி கணிப்பு ஆர்.பி.ஐ., 6.90% உலக வங்கி 6.60% ஓ.இ.சி.டி., 6.10% மூடிஸ் 6.00%

‘போதுமான இருப்பு உள்ளது’ மேற்காசிய போர் காரணமாக ஏற்பட்டுள்ள எரிபொருள் தட்டுப்பாட்டை சமாளிக்க, இந்தியாவிடம் போதுமான இருப்பு உள்ளதாக உலக வங்கி தெரிவித்துள்ளது. அதிகப்படியான அன்னிய செலாவணி கையிருப்பு, சிறப்பான நிதிநிலை மற்றும் குறைவான பணவீக்கம் ஆகியவை இந்த நிச்சயமற்ற சூழலுக்கு மத்தியிலும் நாட்டின் பொருளாதாரம் வளர்ச்சி பாதையில் பயணிக்க உதவும் என உலக வங்கி கூறியுள்ளது.

Source link