சென்னை: கடந்த ஆண்டை போலவே இந்தாண்டும் மாம்பழ விளைச்சல் அதிகமாக இருக்கும் என்று மாம்பழ உற்பத்தியாளர்கள் நம்பிக்கை தெரிவித்து உள்ளனர்.இதுகுறித்து மாம்பழ ஏற்றுமதியாளர்கள் தெரிவிக்கையில், “மஹாராஷ்டிரா, குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில், இந்தாண்டு மாம்பழ விளைச்சல் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மார்ச் பாதியில் விளைச்சல் துவங்கும். தனித்த சுவை, வாசனை, நிறம் ஆகியவற்றால் அல்போன்சா, கேசர் உள்ளிட்ட மாம்பழங்களுக்கு வெளிநாடுகளில் நல்ல வரவேற்பு உள்ளது.கனடா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய நாடுகள், மாம்பழ ஏற்றுமதிக்கான முக்கிய சந்தையாக உள்ளன. ஐரோப்பிய நாடுகளுடன் தடையற்ற ஒப்பந்தம், அமெரிக்காவின் வரி குறைப்பு ஆகியவற்றால், இந்திய மாம்பழங்கள் இந்தாண்டு கூடுதலாக ஏற்றுமதியாகும்,” என்றனர்.
தமிழகத்தின் நிலை குறித்து மாம்பழ உற்பத்தியாளர் கூட்டமைப்பின் உறுப்பினர் உதய் சிங் கூறியதாவது:
தமிழகத்தில் 1.46 லட்சம் ஹெக்டேரில் மாம்பழ சாகுபடி நடைபெறுகிறது.
ஆண்டுக்கு கிட்டத்தட்ட 10 லட்சம் டன் மாம்பழங்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. கடந்தாண்டு மாம்பழ விளைச்சல் அதிகமாக இருந்தது.
ஆனால், போதுமான விலை கிடைக்கவில்லை. இந்தாண்டு பல இடங்களிலும் மாமரங்களில் நன்றாக பூ பூத்துள்ளது. காலநிலை ஒத்துழைத்தால் இந்தாண்டும் மாம்பழ விளைச்சல் அதிகமாகவே இருக்கும்.
குறிப்பாக செந்துாரா, பெங்களூரா (தோத்தாபுரி), நீலம் மாம்பழங்களின் விளைச்சல் அதிகமாகவும் அல்போன்சா, இமாம் பசந்த் உள்ளிட்ட உயர் ரக மாம்பழ விளைச்சல் சற்று குறைவாகவும் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழகத்தில் ஏப்ரல் மாத பாதியில் அறுவடை துவங்கி, ஜூலை வரை நடைபெறும்.
இவ்வாறு கூறினார்.
