புதுடில்லி: இயற்கை விவசாயத்தை வலுப்படுத்த வேண்டும், ஏற்றுமதியில் கவனம் செலுத்த வேண்டும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
விவசாயம், கிராமபுற வளர்ச்சி தொடர்பான இணைய வழி கருத்தரங்கில் பிரதமர் மோடி பேசியதாவது: பட்ஜெட்டில் ஒவ்வொரு பைசாவும், உரிய நோக்கத்திற்காக பயன்படுத்துவதை உறுதி செய்ய பரிந்துரை முக்கியம். நீண்ட கால வளர்ச்சி பயணத்தில் விவசாயம் முக்கிய பங்கு வகிக்கிறது. விவசாயம் நமது பொருளாதாரத்தின் முக்கிய தூண்கள். விவசாய துறையை அரசு வலுப்படுத்தி வருகிறது. வேதியியல் இல்லாத விவசாயத்தை செய்ய வேண்டும்.
ரூ.4 லட்சம் கோடி
இயற்கை விவசாயத்தை வலுப்படுத்த வேண்டும், ஏற்றுமதியில் கவனம் செலுத்த வேண்டும். வேளாண் துறையை ஏற்றுமதி சார்ந்ததாக மாற்ற வேண்டும். விவசாயிகள் இந்தியாவில் உள்ள மாறுபட்ட காலநிலை சவால்களையும் சமாளிக்க வேண்டும். தமிழக, கேரள விவசாயிகள் நன்மைக்காக தேங்காய்க்கு பட்ஜெட்டில் கூடுதல் முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. பிரதமர் கிசான் திட்டத்தின் கீழ், ரூ.4 லட்சம் கோடிக்கு மேல் கடன் பெற்று விவசாயிகள் பயன் அடைந்துள்ளனர்.
கிராமப்புற வளர்ச்சி
பொருளாதார பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, பல்வேறு அரசு திட்டங்கள் விவசாயிகளுக்கான பிரச்னைக்கு தீர்வு கொடுத்து இருக்கிறது. விவசாயப் பொருட்களின் தரத்தை மேம்படுத்த வேண்டும். எங்கள் அரசு கிராமப்புற வளர்ச்சியில் கவனம் செலுத்துகிறது. 2029ம் ஆண்டுக்குள் மேலும் 3 கோடி பெண்களை மகளிர் சுய உதவிக்குழுக்களில் சேர்க்க இலக்கு நிர்ணயித்துள்ளோம். விவசாயத் துறையில் கவனம் செலுத்த மாநிலங்களை ஊக்குவிக்க வேண்டும். இவ்வாறு பிரதமர் மோடி கூறினார்.
