இரட்டை இலைக்கு ஓட்டு கேட்ட த.வெ.க., செங்கோட்டையன்

ஈரோடு: த.வெ.க., தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன், இரட்டை இலைக்கு ஓட்டு கேட்டதால், அக்கட்சியினர் அதிர்ச்சி அடைந்தனர்.

சில மாதங்களுக்கு முன் வரை, அ.தி.மு.க.,வில் இருந்த செங்கோட்டையன், அக்கட்சியில் இருந்து நீக்கப்பட்டதால், த.வெ.க.,வில் இணைந்தார். கோபிசெட்டிப் பாளையம் தொகுதியில், த.வெ.க., வேட்பாளராக போட்டியிடுகிறார்.

இந்நிலையில், ஈரோடு மாவட்டம் பவானிசாகர் தொகுதிக்கு உட்பட்ட சத்தியமங்கலம், வடக்குபேட்டை, கே.வி.பாளையம், எஸ்.ஆர். டி., கார்னர் உள்ளிட்ட பகுதிகளில், த.வெ.க., வேட்பாளர் தமிழ்செல்வியை ஆதரித்து, செங்கோட்டையன் நேற்று பிரசாரம் செய்தார். அப்போது, இரட்டை இலைக்கு ஓட்டு போடுமாறு கூறினார்.

அ.தி.மு.க., சின்னத்தை கூறி செங்கோட்டையன் ஓட்டு கேட்டதால், த.வெ.க., தொண்டர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து, சுதாரித்த செங்கோட்டையன், ‘நீண்ட காலமாக அந்த கட்சியில் இருந்ததால், பழக்க தோஷத்தில் வந்து விட்டது’ என கூறி சமாளித்தார்.

இதையடுத்து, சத்தியமங்கலத்தில் செங்கோட்டையன் அளித்த பேட்டி:

சி.பி.ஐ., வாயிலாக த.வெ.க., தலைவர் விஜயை முடக்க முயற்சிக்கின்றனர்.

ஜனநாயகன் படம் இணையதளத்தில் வெளியானதால் ௧,௦௦௦ கோடி ரூபாய் நஷ்டத்தை, பா.ஜ.,வை சேர்ந்த மத்திய இணையமைச்சர் முருகன் ஏற்படுத்தி விட்டார்.

பா.ஜ.,வை சேர்ந்த மற்றொரு மத்திய அமைச்சர் பீயூஷ் கோயல், ‘நடிகர் நாட்டை ஆள நினைக்கலாமா?’ என கேட்கிறார். ஏற்கனவே எம்.ஜி.ஆர்., ஆளவில்லையா.

இவ்வாறு அவர் கூறினார்.

Source link