இருக்கை தேர்வு இலவசமானால் விமான டிக்கெட் கட்டணம் உயரும்: 'ஏர் இந்தியா, இண்டிகோ' எச்சரிக்கை

புதுடில்லி: ‘விமானங்களில், 60 சதவீத இருக்கைகளை பயணியருக்கு இலவசமாக ஒதுக்க வேண்டும்’ என்ற மத்திய அரசின் உத்தரவுக்கு, விமான நிறுவனங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

விமான பயணியரின் வசதி மற்றும் விமான சேவை ஒழுங்கு முறைகளை மேம்படுத்தும் நோக்கில், மத்திய சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம் புதிய வழிகாட்டுதல்களை சமீபத்தில் வெளியிட்டது.

தற்போது விமான டிக்கெட் முன்பதிவின் போது ஜன்னலோர இருக்கைகளுக்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுகின்றன. மிகக் குறைந்த இருக்கைகள் மட்டுமே கூடுதல் கட்டணமின்றி கிடைக்கின்றன.

இந்நிலையில், விமான போக்குவரத்து அமைச்சகத்தின் புதிய வழிகாட்டுதலில், 60 சதவீத இருக்கைகள் வரை பயணியருக்கு கூடுதல் கட்டணமின்றி வழங்க வேண்டும் என கூறப்பட்டிருந்தது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள விமான நிறுவனங்கள், இந்த விதிமுறையை அமல்படுத்தினால் விமான கட்டணங்கள் உயரும் என எச்சரித்துள்ளன. இது குறித்து இந்திய விமான நிறுவனங்கள் கூட்டமைப்பு சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

இருக்கை தேர்வுக்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கக் கூடாது என்ற உத்தரவு விமான நிறுவனங்களுக்கு பெரிய நிதி சிக்கலை ஏற்படுத்தும்; இழப்பை ஈடு செய்ய கட்டணங்கள் உயர்த்தப்படலாம்.

பயணியருக்கு நன்மை தரும் நோக்கில் இருந்தாலும், இது எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தும். தொழில் நடவடிக்கைகளில் ஒழுங்குமுறை தலையீட்டை ஏற்றுக்கொள்ள முடியாது.

கட்டண நிர்ணயம், இருக்கை ஒதுக்கீடு ஆகியவை நிறுவனங்களின் அடிப்படை முடிவுகள். இது போன்ற சேவைகளுக்கான கட்டணத்தை நிர்ணயிக்க விமான போக்குவரத்து அமைச்சகத்துக்கு அதிகாரம் இல்லை.

இந்த உத்தரவு முன் ஆலோசனை இல்லாமல் வெளியிடப்பட்டுள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Source link