சென்னை: ஹிந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் அறிக்கையில் கூறியுள்ளதாவது:
ஹிந்து மதத்தையும், ஆண்டாள், ராமர், சீதா உள்ளிட்ட ஹிந்து கடவுள்களையும், இழிவுபடுத்தி எழுதுவதையே தொழிலாகக் கொண்ட வைரமுத்துவுக்கு, ‘ஞானபீட விருது’ வழங்கியது கண்டிக்கத்தக்கது. பிரதமர் மோடி மற்றும் ஹிந்து தேசியக் கொள்கைகளை எதிர்த்து அவதுாறு பரப்புவதோடு, சனாதன ஹிந்து தர்ம ஒழிப்பு மாநாடு நடத்திய, தமிழக முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தை சேர்ந்த தமிழ்செல்வனுக்கு, ‘சாகித்ய அகாடமி விருது’ வழங்குவதும் கண்டனத்துக்குரியது.
பிரிவினைவாதிகள் மற்றும் பயங்கரவாதிகளை ஆதரிக்கும் தேச விரோதிகள் எல்லாம், சினிமா, கலை, இலக்கிய அமைப்புகளில் அங்கீகரிக்கப்படுவது, தேசத்திற்கே ஆபத்து. இலக்கியம், சினிமா, கலை, கலாசார அமைப்புகளில், திராவிட, கம்யூனிஸ்ட், நக்சல்வாதிகள் திட்டமிட்டு ஊடுருவி உள்ளனர். ஞானபீட விருது, சாகித்ய அகாடமி அமைப்புகள் போன்றவை ஹிந்து விரோதிகளாலும், பிரிவினைவாதிகளாலும் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது.
இலக்கிய அமைப்புகளில் ஊடுருவியுள்ள, அர்பன் நக்சல்களை ஒழிக்க, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா திட்டம் வகுத்து செயல்பட வேண்டும். வைரமுத்து, தமிழ்ச்செல்வன் ஆகியோருக்கு அறிவித்த விருதுகளை திரும்பப்பெற்று, அவர்கள் மீது, ஹிந்து மத அவமதிப்பு, தேச விரோத கருத்துகள் ஆகியவற்றுக்கு, வழக்குப் பதிவு செய்து, தண்டனை வழங்க வேண்டும். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.
